பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒரு கவியின் விலை

371

“அப்படியா?”

“நிமிஷமாப் பூத்தொடுப்பாள்...”

“தேவலையே...”

“பிரயாணம் செய்து வந்த உடற்களைப்புக்கு இதமாக இருக்கும்; கொஞ்சம் பீர் சாப்பிடுங்களேன். ஃபிரிஜிலே வச்சிருக்கேன். கொண்டு வரட்டுமா?”

அவன் தலையை ஆட்டினான். கிளாஸ் நிறைய துரை கொப்பளிக்கும் பீரோடு வந்தாள் அவள்.

“இந்து! சின்ன வயசிலே ஸ்கூல்லே படிக்கிறப்போ பேசவே பயப்பட்டு நடுங்குவீர்கள் நீங்கள்.”

“அத்தனைக்கத்தனை இப்ப வாயாடி ஆயிட்டேன். இவருடைய உத்தியோகம் அப்படி. ஆபீஸர்ஸ் மெஸ்லே வாரம் தவறாமே புதுசு புதுசா எத்தனைப் பேரைப் பார்க்கணும், பழகணும், பேசணும், சோஷலா இருக்கணும்...”

“அதனாலே ரொம்பவும் சோஷலா மாறியாச்சு இல்லியா?”

“ஆமாம்.”

காலியான பீர் கிளாஸை டேபிளில் வைத்தான் அவன். “இப்ப மணி பதினொண்ணரை, லஞ்ச் எத்தனை மணிக்கு வச்சுக்கலாம்?”

“ஒரு மணிக்கு வச்சுக்கலாம். அது வரை நான் கொஞ்சம் தூங்கலாம்னு பார்க்கிறேன்.”

“போகலாம். வாருங்கள்.”

அவன் அவளைப் பின் தொடர்ந்தான். ஏ.ஸி. ரூமில் கொண்டு வந்து விட்ட பின்பும் தன்னைத் தூங்க விடாமல் அவள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை.

“ஆடைகள் கண்ணிழக்க வேண்டும் என்ற உங்கள் கவிதை எனக்கு மிகவும் பிடிக்கும்! அதை நான் பலமுறை திரும்பத் திரும்பப் படித்திருக்கிறேன்.”

“இப்போது எனக்கே அந்தக் கவிதை பிடிக்காது! மிகவும் சிறுபிள்ளைத்தனமான தொரு திமிரில் அன்று அந்தக் கவிதையை எழுதி விட்டேன்.”

“அந்தக் கவிதையிலுள்ள இந்தத் திமிர்தான் எனக்குப் பிடித்திருக்கிறது...”

மேலே சம்பாஷணை வளர இடங்கொடுக்காமல் கைகளைத் தூக்கிச் சோம்பல் முறித்துக் கொட்டாவி விட்டான் அவன்.

“சரி! உங்களுக்குத் தூக்கம் வருகிறது, தூங்குங்கள்.” என்று சொல்லிக் கொண்டே வெளியே போனாள் அவள். போனவள் மறுபடி திரும்பி வந்து ஒரு புன்முறுவலை மெல்ல உதிர்த்தபடி, “டிஸ்டர்ப் பண்றதா நினைக்காதீங்க. உங்களுக்கு எது வேணும்னாலும் கூச்சமில்லாமக் கேட்கலாம். இதை உங்கள் வீடு மாதிரி நினைச்சுக்கணும்...”