பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : ஒரு கவியின் விலை

875

கவிஞர் புறப்பட்டுப் போன மறுதினமோ என்னவோ பகலில் எங்கோ வெளியில் போய் விட்டு வந்த இந்து சீதாவைக் கூப்பிட்டு வாய் ஓயுமட்டும் குரல் கொடுத்து அலுத்த பின் அவளைத் தேடி மாடிப்படியருகே கீழே அவள் உபயோகத்துக்கும் ஸ்டோர் ரூமுக்காகவும் சேர்த்து விட்டிருந்த அறையில் போய்ப் பார்த்த போது சீதா அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். அவள் கையருகே ஏதோ - தூங்குமுன் அவள் படித்துக் கொண்டிருந்த புத்தகம் நழுவியிருந்தது. வேலைக்காரி என்ன புத்தகதைப் படித்துக் கொண்டிருக்கிறாள் என்று சாதாரணமாக அவள் பார்க்க விரும்ப மாட்டாள். ஆனால் இன்று என்னவோ அதை எடுத்துப் பார்க்க வேண்டும் போல ஆவலாயிருந்தது அவளுக்கு. மெல்ல ஒசைப்படாமல் அதை எடுத்துப் பிரித்தாள் இந்து. முதல் பக்கத்தில்-

‘அழகும் மணமும் நிறைந்த மாலைகளைத் தொடுக்கும் நல்ல கைகளுக்கு - அன்புடன் - கவி குமுதசந்திரன் - என்று எழுதித் தேதியிட்டுக் கையொப்ப மிட்டிருந்ததைக் கண்டதும் இந்துவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அப்பாவி போல் தூங்கும் அந்த வாலிப வேலைக்காரியின் மேல் அவளுக்குத் திடீரென்று கோபமாகவும் பொறாமையாகவும் இருந்தது. கழுத்தை நெரித்து அவளைக் கொன்று விட வேண்டும் போல் வெறி வந்தது.

'கவிஞன் தனக்கு ஒரு புத்தகத்தை இப்படிக் கையொப்பமிட்டுக் கொடுத்திருந்தால், அதை ஊரெல்லாம் சொல்லிப் பெருமைப்பட முடியும். அந்தக் கவிஞனின் நோக்கில் என் வீட்டு வேலைக்காரியின் பெருமானம் கூட நான் மதிப்புப் பெறவில்லையா?’ என்றெண்ணிய போது இந்துவுக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது. விழாவன்று மாலை தானும் அவரும் புறப்படும் போது வேலைக்காரி சீதா மாலை தொடுத்துக் கொண்டிருந்தது இந்துவுக்கு ஞாபகம் வந்தது. அவர் புத்தகத்தின் முதல் பக்கத்தில் எழுதிக் கையொப்பமிட்டுக் கொடுத்திருப்பதையும் சீதா மாலை தொடுத்துக் கொண்டிருந்ததையும் சேர்த்து நினைத்த போது என்ன நடந்திருக்க முடியும் என்பதை இந்துவால் அனுமானிக்க முடிந்தது.

ஒரு கவியின் அன்பைப் பெறுவதற்காக அளவுக்கதிகமான விலையைக்கூட கொடுக்க இந்து துணிந்திருந்தாள். மற்றொருத்தியோ ஒரு சர்வ சாதாரணமான விலைக்கு அதை வாங்கியிருக்கிறாள். சீதாவின் மேலேற்பட்ட கோபவெறி தணிந்து தனக்குத்தானே வாய் விட்டுக்கோவென்று கதறி அழுது விடவேண்டும் போலிருந்தது இந்துவுக்கு. சிரமப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்டு ஒசைப்படாமல் புத்தகத்தைத் தூங்குகிறவளின் கையருகே எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு,

‘ஒரு கவியின் விலையை நிர்ணயம் செய்வதில் என் அளவுகோல் எங்கோ ஒரு நூலிழை தவறி விட்டது’ என்று மனத்திற்குள் நினைத்தபடி நடைப் பிணம் போல் மெதுவாக அங்கிருந்து நகர்ந்தாள் இந்து.

(1974-க்கு முன்)