பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

896

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அப்பா பேரே வரலை. கூட்டம் முடிஞ்சிட்டுது. புறப்பட்டு வந்துட்டோம்” என்று அவர்களிடமிருந்து தாயை நோக்கிப் பதில் வந்தது.

“குடும்பத்துக்கு உதவி செய்ய நிதி உதவிக் குழு அமைக்கப் போறதா அந்த மாவடியாப் பிள்ளை இங்கே துக்கத்துக்கு வந்தப்பச் சொல்லியிருந்தாரே; அதைப் பற்றி ஒண்ணும் அங்கே பேசினவங்க சொல்லலியா?”

“சொன்னாங்க. ‘நிதி உதவி செய்யறதை விட அவர் பேரும், புகழும் என்னைக்கும் நிலைச்சி நிற்கிற மாதிரி ஒரு நினைவு மண்டபம் கட்டிடறதே நிலைத்த சின்னமாக அமையும்’னு வரவேற்புரை கூறினவர் யோசனை கூறினார். அந்த யோசனைப்படியே தலைவர் பேசினார். மற்றவர்களும் அதையே ஆதரிச்சுப் பேசிட்டாங்க. அதுக்கப்புறம் யாரும் குடும்பத்தைப் பத்தியே எதுவும் சொல்லலே”

“குடும்பம் நடுத்தெருவில் நிற்கும்னு நினைச்சாங்களா?”

“என்ன நினைச்சாங்களோ தெரியலை, எல்லாருமா அந்த மாவடியாப் பிள்ளையை இந்திரன் சந்திரன்னு புகழ்ந்தே பேசிக் கூட்டத்தை முடிச்சுப்பிட்டாங்க”

“அப்டீன்னா, இங்கே வா! நான் எழுதறாப்ல அந்த மாவடியாப் பிள்ளைக்கு உடனே ஒரு லெட்டர் எழுது. உயர்திரு மாவடியாப் பிள்ளை அவர்கள் சமூகத்துக்கு, இறந்த தியாகி கந்தப்பப் பிள்ளையின் மனைவி கோமதியம்மா எழுதுவது. தாங்கள் என் கணவர் பெயரில் கட்ட இருக்கும் நினைவு மண்டபத்துக்கு அஸ்திவாரம் தோண்டியதும், எங்களுக்குத் தகவல் தெரிவித்தால் நானும் என்னுடைய மணமாகாத இரு பெண்களும் அங்கு வருகிறோம். எங்களை உள்ளே தள்ளி மூடி விட்டு அதன் மேல் நினைவு மண்டபத்துக்கு அஸ்திவாரம் போடுவதுதான் ரொம்பப் பொருத்தமாயிருக்கும். தயவு செய்து அப்படியே செய்யக் கோருகிறேன்.”

“அம்மா! அம்மா! ஏம்மா இவ்வளவு ஆத்திரப்படறே?”

“ஆத்திரப்படாமே என்னடி செய்யச் சொல்றே? உங்கப்பா தியாகியாகச் சாகாமல் ஒரு தொழிற்சாலைக் கூலியாகச் செத்திருந்தால் கூட பி.எஃப். அது இதுன்னு ரெண்டாயிரம், மூவாயிரம் கைக்கு வரும். தியாகியாகச் செத்ததினாலே அனுதாபக் கூட்டம் போட்டது தவிர வேறென்ன மிச்சம்” என்று கைகளைச் சொடுக்கினாள் கோமதி ஆச்சி. அவளுடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லப் பெண்களால் முடியவில்லை. அவர்கள் ஒன்றும் பேசத் தோன்றாமல் கண்கலங்கி நின்றார்கள்.

(1975-க்கு முன்)