பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : பரபரப்பாக ஒரு செய்தி

903

“பாதயாத்திரை என்ற பெயரில் தங்கம் கடத்திய பெண்கள்! அலைக்கரைப்பட்டி வட்டாரத்தில் சுலைமான் சேட் கைது! அருளரசி பரிசுத்தாதேவியும் அவர் குழுவினரும் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளனர். எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர்கள் ராகவன், வீரமணி இருவரும் தங்கள் குழுவினருடன் நேற்று நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு அலைக்கரைப்பட்டிக்கும் மதுரைக்கும் நடுவே ‘பாத யாத்திரை’ செய்து கொண்டிருந்த அருளிசைக் கோஷ்டி என்ற பெயரிலான இரகசியக் கடத்தல் குழுவினரிடம் வீணை, தம்புரா, மிருதங்கம், ஆர்மோனியம், சுருதிப் பெட்டிகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பல லட்சம் பெறுமானமுள்ள தங்கத்தைப் பிடித்தனர். அருளரசி பரிசுத்தாதேவியின் முகமூடி கிழிபட்டது. இவர் ஏற்கனவே பம்பாயில் எட்டாண்டுகளுக்கு முன் வைரக் கடத்தலில் பிடிபட்ட ஆயிஷா தேவிதான் என்ற உண்மையும் வெளிப்பட்டது. இவரையும், இவர் குழுவினரையும் பயன்படுத்தித் திருமுறைக் கழகம் என்ற பஜனை மடத்தில் பாடச் செய்வது போல் ஏற்பாடு செய்து, ஒவ்வொரு மாதமும் வழக்கமாக இந்தத் தங்கக் கடத்தலை நடத்தியவர் அலைக்கரைப் பட்டி சுலைமான் சேட் என்பது கண்டு பிடிக்கப்பட்டது. அலைக்கரைப்பட்டி வட்டாரத்தில் இச்செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல கடத்தல்காரர்கள் பிடிபடலாம் என்று அதிகாரிகள் நம்பகமாகக் கூறுகிறார்கள்” என எழுதி ‘ஸ்டோரி ஃபாலோஸ்’ என்பதாக மேலும் தொடர்வதாகச் சொல்லி முடித்திருந்தார் நிருபர் சாமிநாதன். சுப்புரத்தினம் பிள்ளை இதைப் படித்ததும்,”என்ன பிள்ளைவாள்! நம்ப முடியுதா? இல்லியா?” என்று சாமிநாதன் அவரைக் கேட்டார்.

“வேறென்ன செய்யிறது? நம்பத்தான் முடியுது! நீங்க ரொம்ப நாளா இந்த ஊர்லேருந்து ஸென்ஸேஷனலா நியூஸ் எதுவும் கிடைக்கலேன்னு வருத்தப்பட்டீங்க. இப்பக் கிடைச்சிருக்கு. இனி மேலும் தொடர்ந்து கிடைக்கும்னு தோணுது. இந்த நல்ல வேளையிலே எனக்கொரு சின்ன உபகாரம் மட்டும் நீங்க பண்ணனும்?”

“என்னது? என்ன உபகாரம்?”

“இந்த நியூஸ்ல ‘திருமுறைக் கழகம்’னு எங்க சங்கத்தோடபேர் வருது. தயவு செய்து அந்த இடத்திலே ‘இவர் குழுவினரைப் பயன்படுத்திப் பஜனை மண்டபத்தில் பாடச் செய்வது போல்’னு மட்டும் போட்டுக்குங்க. திருமுறைக் கழகம் ஒரு பாவமும் செய்யலை அநாவசியமா அதும் பேரை இதிலே இழுக்காதீங்க…”

“அதெப்படி முடியும்?”

“நீங்க மனசு வெச்சா முடியும் நிருபர்வாள்!”

நிருபர் சாமிநாதன் தாம் எழுதி வைத்திருந்த செய்தியை எடுத்துத் ‘திருமுறைக் கழகம்’ என்ற பெயர் வந்த இடத்தில் அதை அடித்து விட்டு, ‘இவரையும் இவர் குழுவினரையும் பயன்படுத்திச் சுலைமான் சேட் தனது தென்னந்தோப்புக்கு அருகிலுள்ள ஒரு தகரக் கொட்டகையில் பஜனை பாடச் செய்வது போல நடிக்கச் செய்து’ என்று திருத்திய பின் மீண்டும் அதைப் பிள்ளைவாளிடம் காண்பித்தார்.