பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

918

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

அப்படிக் கேட்ட வாடிக்கைக்காரன் ஓர் இளைஞன்தான். பி.யூ.சி. பெயிலாகி, மேலே படிப்பும் வராமல், ஊரோடு விவசாய வேலைகளைப் பார்க்கவும் முடியாமல் ஓர் இரண்டுங்கெட்டான் கிராமத்தில் தங்கி விட்ட வேல்சாமி என்ற இளைஞன்தான் ஒரு நாள் குத்தலாகப் பழ. சொ. விடம் இப்படிக் கேட்டு விட்டுப் பதிலுக்கு வாங்கிக் கட்டி கொண்டான்.

வேல்சாமியின் தற்காலிக வேலை கவிதைகள் எழுதிப் பத்திரிக்கைகளுக்கும், பதிப்பகங்களுக்கும் அனுப்புவது. எதிர்கால இலட்சியம் சினிமாக்களுக்குப் பாட்டெழுதிப் பிரபலமாக வேண்டுமென்பது. ஆனால், இரண்டாலும் அப்போதைக்கு ஒரு பைசாக் கூட அவனுக்கு வருமானமில்லாமல் இருந்தது. அவன் வறுமையில் சிக்கித் தவித்தான்.

தமிழ் இலக்கிய ரசிகர் என்ற முறையில் வேல்சாமியின் மேல் பழ. சொ. வுக்குக் கொஞ்சம் அபிமானம் உண்டு. அவனுக்குப் படிப்புதான் வரவில்லையே ஒழிய, கவிதை எழுதப் பிரமாதமான திறமையிருந்தது. திருக்குறள் கழகக் கவி அரங்கங்களிலே வேல்சாமிக்கு அடிக்கடி வாய்ப்புக் கொடுத்து வந்தார் பழ.சொ.

“நீ முன்னுக்கு வந்துடுவே தம்பீ! பழைய கவிதைகளிலே மட்டுமே காண முடிஞ்ச வாக்கு வளம் உன் பாட்டிலே இருக்கு” என்று அடிக்கடி மனநிறைவோடு வேல்சாமியைப் பழ. சொ. பாராட்டிக் கொண்டிருந்தார். ‘தம்பி! தம்பீ!’ என்று அவர் தன்னிடம் இழைவதில் நம்பிக்கை வைத்து ஒரு நாள் அவருடைய வட்டிக் கடைக்குப் படியேறிப் போய் ஐந்து ரூபாய் கை மாற்றுக் கேட்டான் வேல்சாமி. உடனே அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டுக் கொஞ்சம் கூட மலர்ச்சியில்லாத முகத்தோடு கறாரான வியாபாரக் குரலில்”தரேன்.ஆனா எதும் மேலே கடன் கொடுக்கச் சொல்றேன்னேன்? ரிஸ்ட் வாட்ச்சா, மோதிரமா? உன் கையிலே எதையும் காணலியே? மூளியாவில்லே வந்திருக்கே?' என்று பதிலுக்குக் கேட்டார் பழ.சொ.

அப்போதுதான் பழ. சொ. வுக்கும் வேல்சாமிக்கும் மேற்கண்ட வாக்குவாதம் நடந்தது.

“என்னை நம்பி ஓர் அஞ்சு ரூபா தரப்பிடாதா நீங்க?”

“நம்பறது, நம்பாதது எல்லாம் வேற வேறே விஷயம் தம்பீ! அடகுக் கடைன்னு வந்தாச்சின்னா அதுக்குன்னு தனி வளமுறை, இலக்கணம் எல்லாம் இருக்கு அடகு பிடிக்கிறதுன்னே இந்தத் தொழிலுக்குப் பேரு. நான் நூறு ரூபாய் மதிக்கற ஒரு பொருளை நம்பி இவ்வளவு கடன் கொடுக்கலாம். இருநூறு ரூபாய் மதிக்கற பொருளை நம்பி இவ்வளவு கடன் கொடுக்கலாம்னெல்லாம் ஒரு துல்லியமான மதிப்பீடு இருக்கு. அதை மீறி எதையும் இங்கே செய்யறதில்லை…”

“அஞ்சு ரூபா கைமாத்துக்குக் கூடவா அடகு அது இது எல்லாம்?”

“அஞ்சு பைசாவுக்குக் கூடத்தான்னு வச்சுக்கவேன்! நட்பு வேறே, தொழில் வேறே. ‘மயிர் ஊடாடா நட்பின் பொருள் ஊடாடகெடும்’னு வசனம் சொல்லுவாங்க தம்பீ!”