பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : துல்லியமாக ஒரு மதிப்பீடு

919

“அப்போ, ரிஸ்ட் வாட்ச், மோதிரம், பாத்திரம், பண்டத்தை நம்பித்தான் கடன் தருவீங்க. என்னை மாதிரி ஓர் ஏழைக் கவிஞனை நம்பித் தர மாட்டீங்க இல்லையா?”

“ரிஸ்ட் வாட்ச்சா, மோதிரமா, பாத்திரமா, பண்டமாங்கிறது முக்கியமில்லை தம்பீ! நீ கொண்டாற பொருள் எதுவோ, அது துல்லியமாக நான் மதிக்கற பொருளா இருக்கணும். அடகுக் கடையோட தத்துவம் அது.”

“நீங்க மதிக்கறது துல்லியமா இருக்கணும்னு என்ன கட்டாயம்? பல அடகுக் கடைகளிலே மோசடிதானே அதிகமா இருக்கு?”

“மத்தவங்க எப்படியோ தம்பீ? என்னைப் பொருத்த வரை ஏறக்குறைய மூணு மாமாங்கமா இந்தத் தொழில்லே இருக்கேன். என் மதிப்பீடு ஒரு நாளும் தப்பினதில்லே. ரொம்பத் துல்லியமா இருக்கும். நான் ஒரு நாளும் நஷ்டத்துக்கு வியாபாரம் பண்ணினதில்லே. என்னோடவாடிக்கைக்காரங்களையும் நஷ்டப்பட விட்டதில்லை.”

வேல்சாமி மேற்கொண்டு எதிர்வாதம் பண்ணாமல் எழுந்திருந்து போய்ச் சேர்ந்தான். பழ. சொ. சாமர்த்தியமாகப் பதில் பேசி விட்டாலும், ஐந்து ரூபாய் கைமாற்றுத் தர மறுத்து விட்டாரே என்ற ஏமாற்றம் வேல்சாமியின் மனத்தில் இருக்கத்தான் செய்தது.

சில மாதங்களில் நல்லப்பன்பட்டி மிராசுதார் ஒருவர், நிலங்கரைகளை எல்லாம் விற்றுச் சினிமாத் தொழிலில் முதலீடு செய்து படத் தயாரிப்பில் ஈடுபட்டார். அவருடைய தயவில் வேல்சாமிக்கு யோகம் அடித்தது. பழ. சொ. உட்படப் பலருடைய சிபாரிசின் பேரிலும், அந்தத் தயாரிப்பாளர் தம் சொந்த ஊரான நல்லப்பன் பட்டிக்கு வரும் போதெல்லாம் வேல்சாமி நேரில் போய்ப் பார்த்து மன்றாடியதன் காரணமாகவும், திடீரென்று ஒரு நாள் வேல்சாமிக்கு அவருடைய கம்பெனியிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டு வரச்சொல்லிக் கடிதம் வந்தது.

நல்லப்பன்பட்டியிலிருந்து சென்னை போவதற்கு எவ்வளவு குறைந்தபட்சமாகச் செலவழித்தாலும், ரூபாய் முப்பது ஆகும். அந்த அதிர்ஷ்டம் நிறைந்த கடிதம் கிடைத்த உற்சாகத்தில், அங்கே இங்கே அலைந்து ஐந்தும், பத்துமாக வாங்கி வெகு சிரமப்பட்டு இருபது ரூபாய் வரை தயார் பண்ணி விட்டான் வேல்சாமி. மாலை ஐந்தே முக்கால் மணிக்கு ரயில் ஏற வேண்டும். நாலு மணி வரை நிதி நிலைமை இருபது ரூபாயைத் தாண்டவில்லை.

பழ. சொ. விடம் போகலாம் என்றால், அவரிடம் அடகு வைக்க மதிப்பீடுள்ள பொருள் எதுவும் வேல்சாமியிடம் இல்லை. ‘நீ கொண்டாற பொருள் எதுவோ அது துல்லியமாக நான் மதிக்கறதா இருக்கணும்‘ என்று பழ. சொ. முன்பு சொல்லியிருந்த வாக்கியம் வேல்சாமிக்குத் திரும்பத் திரும்ப நினைவு வந்தது.

திடீரென்று ஏதோ ஞாபகம் வந்தவனாக, டிரங்குப் பெட்டியைக் குடைந்து, ஒரு பழைய நாற்பது பக்கம் நோட்டுப் புத்தகத்தைத் தேடி எடுத்துக் கொண்டு பழ. சொ.