பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

920

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கடையை நோக்கிப் புறப்பட்டான் வேல்சாமி. அப்போது மாலை நாலரை மணி ஆகியிருந்தது.

பழ.சொ. கடையில்தான் இருந்தார். யாரோ ஒரு பெண் பெரிய பித்தளைக் குடம் ஒன்றைக் கொடுத்துப் பணம் வாங்கிக் கொண்டிருந்தாள். அவளை அனுப்பி விட்டு, வேல்சாமியின் பக்கம் திரும்பி,

“வா, தம்பீ! கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம். நம்மூர்க் கருணேசர் சமேத மெய்யம்மை நாயகி அருளால் நீ சுபிட்சமா வளர்ந்து, முன்னுக்கு வரணும்கிறது என் ஆசை” என்று பழ.சொ. அவனை வாழ்த்தி வரவேற்றார்.

“இதைக் கொஞ்சம் பாருங்க? ‘வறுமை நாற்பது’ன்னு ஒரு சின்னப் பிரபந்தம் நம்மூர் மெய்யம்மை நாயகியை முன்னிலைப்படுத்திப் பாடியிருக்கேன். நீங்க பார்த்து ரெண்டு நல்ல வார்த்தை சொன்னீங்கன்னா எனக்குத் திருப்தியாக இருக்கும்” என்று அந்த நாற்பது பக்கம் நோட்டுப் புத்தகத்தைப் பழ.சொ. விடம் நீட்டினான் வேல்சாமி.

காப்பு, கடவுள் வாழ்த்துப் பாடல்களை மனத்துக்குள்ளேயே படித்துக்கொண்ட பழ. சொ. நூலின் முதல் பாடலை உற்சாக மிகுதியால் தேவாரம் பாடுவது போல் வாய்விட்டே அப்போது பாடத் தொடங்கி விட்டார்.

“கொல்லும் பசிப்பிணியின் துன்பத்தால்
பெருங் கொடுமை தாளாமல் நான்
கும்பிட்ட கைக்குப் பதில் கூப்பல்
அறியாத வண்கணாளர்முன்
பல்லும் முகமும் மலரப் பரிந்து
பரிந்துரைத்த சொல்லெதுவும் பலிக்காமல்
பரிதவித்துப் பரிதவித்து வயிறெரிந்த
துயரத்தின் நினைவுகளை
அல்லும் பகலும் அனவரதமும்
எப்போதும் தனித்திருந்தே
ஆற்றாமை மிகுந்திடவே கையற்று
வகையற்று வழியற்று
மெல்லும் படிக்கென்னை மிகநலிய
விடலாமோ நல்லை நகர்
மெய்யம்மையே கருணேசர் நேசிக்கும்
மிகப் பெரிய நாயகியே!”

ஒரு முறை, இரு முறை, மும்முறை, ஆசை தீர வாய் விட்டுப் பாடியபின் “இந்த வாக்கு அட்சர லட்சம் பெறும் தம்பீ! நீ இப்படி உருகிப் பாடினது பொறுக்க முடியாமத்தான் அந்த மெய்யம்மை கண் திறந்து உனக்கு ஒரு வழி விட்டுருக்கா” என்றார். பழ. சொ.