பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

924

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“நமக்குள்ளே இவ்வளவு பிஸினஸ் லைக்கா இருக்கணுமா செட்டியார் ஸார்? நீங்க இந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்தது எனக்குக் கட்டோட பிடிக்கலை. நீங்க அன்னிக்குச் சமயத்திலே பத்து ரூபா தந்திருக்கலேன்னா, நான் ஊரை விட்டே புறப்பட்டிருக்க முடியாது. எதை நம்பி அன்னிக்கு நீங்க கடன் கொடுத்தீங்க? இந்த நாற்பது பக்க நோட்டை மட்டும் நம்பியா? என்னை நம்பியா?”

“நிச்சயமா இந்த நாற்பது பக்கம் நோட்டைநம்பித்தான் கடன் கொடுத்தேன். என் மதிப்பீடு ஒரு நாளும் சோடை போகாது தம்பி! என்னிக்காவது ஒரு நாள் இந்தக் கவிதை லட்சம் லட்சமா விலை போகும்னு அன்னிக்கே மதிச்சவன் நான்.”

“அப்படிமதிச்சவர் கணக்கா ஏன் பத்து ரூபா மட்டும் கடன் கொடுத்தீர்களாம்!” “அது என் தப்பில்லே தம்பீ! நீங்க அன்னிக்கு என் கிட்டக் கடனாகக் கேட்டது அவ்வளவுதான். கேட்கிறதுக்கு மேலே நாங்க கொடுக்கப்படாது. இப்பக் கூட அஞ்சு வருஷத்துச் சில்லறை மாசத்துக்கு கணக்காகப் பத்து ரூபாய் முதலுக்கு ஒன்று வட்டி வீதத்துக்கு என்ன ஆகுதோ, அதுக்கு மேலே கால் தம்பிடி நான் உங்க கிட்டே வாங்கலே தம்பீ…”

“ஏன் வாங்காம இருக்கணும்? நீங்க அப்படி வாங்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறதுதான் எனக்குப் பிடிக்கலே.”

“அது நியாயமில்லே தம்பீ! அடகுக் கடையிலே மீட்டுக்கிட்டுப் போற பொருள் மேலே என்ன பற்று இருக்குதோ, அதை வரவு வச்சிக்கிட்டுப் பொருளைத் திருப்பிக் கொடுத்துடறதுதான் வளமுறை. அதுக்கு மேலே நான் வாங்கறதோ, வாங்க ஆசைப்படறதோ நியாயமா இருக்காது. நான் ஒரு நாளும் நஷ்டத்துக்கு வியாபாரம் பண்ணினவன் இல்லே. என் வாடிக்கைக் காரங்களையும் நஷ்டப்பட விட்டதில்லை. அது என் தொழில் தர்மம். அதை நான் விட்டுட முடியாதுங்க தம்பீ… நீங்க என்னை மன்னிச்சுடணும்” என்று கைகூப்பினார் பழ.சொ.

வேறு வழியின்றிக் கவிஞர் வேல்சாமியும் பதிலுக்குக் கைகூப்பி விட்டுப் புறப்பட எழுந்திருக்க வேண்டியதாயிற்று.

(கல்கி, தீபாவளி மலர், 1975)