பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : இன்னும் எழுதப்படாத ஒரு கவிதை

937

போயிருந்தன. அவற்றுக்குள் தேஜஸ் கனிந்த கண்கள். அருள் ஒழுகும் நோக்கு. சிரித்துக் கொண்டே இருப்பது போன்ற முகம்.

பூக்களைச் சமர்ப்பித்த பின் அவரை வணங்கி விட்டு நான் என்னுடைய முதல் புகைப்படத்தை எடுத்துக் கொண்டேன். வரிசைகளில் காத்திருந்தவர்கள் ஒவ்வொருவராக முன் வந்து அவருடைய பாதங்களின் கீழ் தாமரைப் பூக்களை வைத்து வணங்கினார்கள். இதே பாத பூஜை நிகழ்ச்சி நீண்ட நேரம் தொடர்ந்தது. ‘காவிய கங்கை’ வாசிகளை விட அதிகமாக உலகெங்குமிருந்து கவி சிரேஷ்டரின் ரசிகர்கள் அன்று அங்கு வந்திருந்தார்கள். அதனால் பகல் உணவு நேரம் வருகிறவ ரை பாத பூஜையிலேயே கழிந்து விட்டது.

சிலர் பாத பூஜை நேரத்தின் போதே கவி சிரேஷ்டரின் கவிதைகளை இசைத்துக் கொண்டிருந்தார்கள். அன்றைய தினம் ‘காவிய கங்கை’யை நோக்கி வந்திருந்த கூட்டம் முழுவதுக்கும் அங்கே தங்க இடவசதி போதாத காரணத்தால் பலர் வந்து இறங்கியதும் அப்படியே பக்கத்தில் மலையடிவாரத்து அருவியில் நீராடி, உடை மாற்றிக் கொண்டு வந்து கவி சிரேஷ்டரை வழிபட்டு விட்டு உடனே ஊர் திரும்பத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். பிறந்த தின வைபவத்துக்காகவே வந்த யாத்ரீகர் கூட்டம் அன்று அதிகமாகவே இருந்தது.

நடுவே ஒரு முறை நான் பொது உறவு அதிகாரியை அணுகி, “கவி சிரேஷ்டரிடம் இரண்டே இரண்டு கேள்விகள் மட்டும் கேட்க அனுமதியுங்கள். அதற்கு மேல் ஒரு சிறு தொல்லை கூட என்னால் அவருக்கு ஏற்படாது” என்று கெஞ்சினேன்.

“நிச்சயமாக முடியாது. கவி சிரேஷ்டருடைய உடல் நிலையையும், வயதையும் நினைத்துப் பாருங்கள்! நீங்கள் கோருவதைப் போலவே ஒரு நிமிஷம் பேசினால் போதும் - அரை நிமிஷம் பேசினால் போதும் என்று - வெளி நாட்டிலிருந்து வந்திருக்கும் சில இரசிகர்களும் கூட கோருகிறார்கள். அவர்களிடமும், உங்களிடமும் மட்டும் பேசுவதற்காகவே ஒதுக்கினால் கூட அவருடைய இரண்டு முழு நாட்களும் உடல் நலமும் கெட்டு விடும். ஆகவே, தயவு செய்து மறுபடி கேட்காதீர்கள். அது சாத்யமில்லை” என்று கண்டிப்பாக மறுத்து விட்டார் பொது உறவு அதிகாரி.

என் சொந்த ஆர்வம் காரணமாக நான் ஆசைப்பட்டிருந்தாலும், அந்த அதிகாரி சொன்ன பதில் என்னவோ எனக்கு நியாயமானதாகவே பட்டது.

பிற்பகல் இரண்டு மணிக்குக் ‘காவிய கங்கை’யின் ஒரு மூலையிலிருந்த பாழ்மண்டபம் ஒன்றில் அதே சாய்வு நாற்காலியோடு அப்படியே பல்லக்குப் போலத் தூக்கிச் சென்று கவி சிரேஷ்டரை அமர்த்தினார்கள். அவர் பார்வையில் படுகிறார் போல எதிரே தூண் ஒன்றில் சார்த்திக் கையில் கஞ்சிக் கலயத்துடன் நிற்கும் கட்டழகு மிக்க மலைப் பளிஞர் குலப் பெண் ஒருத்தியின் ஓவியத்தையும் அங்கே வைத்தார்கள். அதன் பின் மாலையில் இருட்டுகிற வரை அவரை யாரும் தொந்தரவு செய்யக் கூடாதென்று அறிவித்து விட்டு எல்லோரையும் அங்கிருந்து கலைந்து போகுமாறு வேண்டிக் கொண்டார்கள்.