பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

938

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

என் மனத்தில் ஏற்கெனவே நான் அவரைக் கேட்கக் கருதியிருந்த இரண்டு கேள்விகளோடு இப்போது மூன்றாவதாக ஒரு கேள்வியும் தோன்றியது. இந்தப் பாழ் மண்டபத்தில் ஏதோ ஒரு முக்கியமான விஷயம் இருக்கிறது. இந்தப் பாழ் மண்டபத்திற்கும், கடைந்தெடுத்த சிற்பம் போன்ற தோற்றத்தோடு ஓவியத்தில் இருக்கும் பளிஞர் நங்கைக்கும் கவி சிரேஷ்டருக்கும் வாழ்க்கையில் ஏதோ மறக்க முடியாத தொடர்புகள் இருக்க வேண்டும். அவற்றின் அந்தரங்கம் கவி சிரேஷ்டரின் இதயத்திற்கு மட்டுமே தெரியும் போலும். மறுபடியும் நான் அடக்க முடியாத ஆவலோடு பொது உறவு அதிகாரியை அணுகினேன். எனது சந்தேகத்தையும், அநுமானத்தையும் சொல்லி வினவினேன்.

“உங்களுடைய ஆவலும், ஆர்வமும் எனக்குப் புரிகிறது. ஆனால், இன்று உங்களோடு ஒரு பத்து நிமிஷம் உட்கார்ந்து பேசவும் எனக்கு நேரமில்லை. கவி சிரேஷ்டருடைய வாழ்க்கையின் பல அபூர்வ சம்பவங்களை வெளியிடவேண்டிய கேள்விகளை நீங்கள் கேட்கிறீர்கள். இவற்றுக்கெல்லாம் விவரித்துப் பதில் சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய உடல் நிலையில் அவர் இப்போது இல்லை. இவற்றில் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கூடிய நிலையில் அவர் உடல் இருந்தாலும், இந்த வயதில் இந்தக் கேள்விகளும் விசாரணைகளுமே அவர் உடல்நிலையைப் பாதிக்கலாம். உணர்ச்சி வசப்பட்டு ஆவேசமடையாமல் இவற்றுக்குப் பதில் சொல்ல முடியாது. அப்படி உணர்ச்சி வசப்படும் போது அவருக்கு இரத்த அழுத்தமோ இரத்தக் கொதிப்போ ஏற்பட நேரலாம். காவிய கங்கையின் மூலகங்கோத்ரியை - விலை மதிப்பற்ற செல்வத்தை அப்படிப்பட்ட துன்பத்துக்கெல்லாம் ஆளாக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் கேள்விக்கெல்லாம் நானே பதில் சொல்கிறேன். நாளைக் காலை வரை தயவுசெய்து பொறுத்திருங்கள்” என்றார் அந்த அதிகாரி.

நான் அதற்கு இணங்குவதைத் தவிர எனக்கு வேறு வழி இருப்பதாகப் படவில்லை.

அன்று பகல் மூன்று மணிக்கும், ஆறு மணிக்கும் இடையே ஒரு முறை நான் தனியே சென்று காவிய கங்கையின் ஒரு மூலையிலிருந்த அந்தப் பாழ் மண்டபத்தைப் பார்த்தேன்.

சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடியே எதிர்ப்புறம் இருந்த பளிஞர் மங்கையின் மிகப் பெரிய ஆயில் பெயிண்டிங்கைப் பார்த்துக் கொண்டிருந்த கவி சிரேஷ்டரின் கண்களில் ஈரம் பளபளப்பதையும், அவை நனைந்திருப்பதையும் நன்றாகக் கவனிக்க முடிந்தது.

அந்தக் காட்சியை யாரும் கவனித்து விடாதபடி ஒரு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன் நான்.

கவி சிரேஷ்டரைப் பற்றிய என்னுடைய மூன்று கேள்விகளுக்குமான ஒரே பதில் - அந்தப் பாழ் மண்டபத்தில்தான் இருக்கிறது என்பது போல் இப்போது எனக்குத் தோன்றியது.