பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி : இன்னும் எழுதப்படாத ஒரு கவிதை

939

‘ஒரு மாபெரும் கவிஞரின் மிக முக்கியமான வாழ்க்கை இரகசியங்களை எழுதி வெளியிடப் போகும் முதல் வாய்ப்பை நான் ஒருவன்தான் பெறப் போகிறேன். ஒரு மாபெரும் தேசப்போராட்ட வீரர், ஒரு மாபெரும் கவிஞர், ஞான பீடமாக விளங்கும் ஒரு மாபெரும் கலா கேந்திரத்தை உருவாக்கிய ஞானி, தன்னுடைய முதல் கவிதையை ஏன் இன்னும் எழுதவில்லை என்ற காரணம் என் மூலம்தான் உலகத்துக்குத் தெரியப் போகிறது’ என எண்ணிப் பெருமிதப்பட்டது என் மனம்.

மாலை 6 மணி முதல் 8 மணி வரை கவி சிரேஷ்டர் தம்முடைய குடிலில் ஓய்வு கொண்டார். இரவு 8 மணி முதல் ஒரு மணி வரை அவருடைய கவிதைகளிலிருந்து இசைக் கச்சேரிகள் என்று, நாட்டிய நாடகங்கள் என்று, சொற்பொழிவுகள் என்று, ‘காவிய கங்கை’யில் பிரிவு பிரிவாக விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.

மறுநாள் விடிந்த பொழுது விழா நடந்து முடிந்த இடங்களுக்கே உரிய மங்கல அயர்வு காவிய கங்கையிலும் தெரிந்தது. ஆனால், அந்த இனிய அயர்வு அதன் நடைமுறைகளைப் பாதிக்கவில்லை.காவிய கங்கையின் பொது உறவு அதிகாரி எனக்கு வாக்களித்திருந்தபடி அவரிடம் எனது கேள்விகளைக் கேட்கச் சென்றேன். அவருடைய அறையில் என் பார்வையில் படுகிற விதத்தில் அந்த ஆயில் பெயிண்டிங் இருந்தது, பளிஞர் குலப் பெண்ணின் படம்தான்.

மனத்தில் உடனே வந்து பதிந்து விடும் அழகுடன் கூடிய அந்த மலைப் பளிஞர் யுவதி மலையடிவாரத்துப் பாழ் மண்டபத்தில் குறுந்தாடியுடன் கூடிய இளைஞர் ஒருவருக்குக் கஞ்சி வார்ப்பதைப் போல் மற்றோர் ஒவியமும் அறையின் பிறிதொரு பகுதியில் இருந்தது. .

காவிய கங்கையின் பொது உறவு அதிகாரி எனக்குப் பேட்டியளிக்கத் தயாராக வந்து அமர்ந்தார்.

நான் குறிப்பு நோட்டுப் புத்தகத்தையும், பென்சிலையும் எடுத்து வைத்துக் கொண்டு அவரைக் கேட்கத் தயாரானேன். அவர் நிபந்தனை போட்டார்:

“இன்றைக்கு நிறைய அலுவலக வேலைகள் காத்திருக்கின்றன. ஒரு மணி நேரத்திற்குள் நீங்கள் என்னை விட்டு விடவேண்டும்”

“ஒரு மணி நேரம் எதற்கு? அவ்வளவு நேரம் ஆகாது. இதோ எனது முதல் கேள்வி: கவி சிரேஷ்டர் குமுத சந்திரர் ஏன் தமது எல்லாப் பதிப்புக்களிலும் தம்முடைய, முதல் கவிதை இன்னும் எழுதப்படவில்லை என்கிறார்? வெளி வந்திருக்கும் பல நூறு கவிதைகளில் ஏதாவது ஒன்று முதல் கவிதையாகத்தானே இருந்திருக்க வேண்டும்?”

“அப்படியில்லை, தமது முதல் கவிதையை இன்னும் தாம் எழுதவில்லை என்பதை உபசாரத்துக்காகவோ, தன் அடக்கமாகவோ அவர் அப்படிச்சொல்லவில்லை.அதில் மிக உருக்கமான வரலாறு ஒன்று அடங்கியிருக்கிறது.”

“என்ன வரலாறு?”