பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

940

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

“இதோ இந்த ஒவியத்தைப் பாருங்கள்! இதில் உள்ள மலைப் பளிஞர் பெண் மட்டும் இல்லை என்றால், கவி குமுதசந்திரரின் கவிதைகள், காவிய கங்கை எதுவுமே இல்லை.”

“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”

“பல ஆண்டுகளுக்கு முன் கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு, வெளியேறித் தானும் தன்னை ஒத்த சில தோழர்களும் சேர்ந்து தேசபக்திப் புரட்சிச் சங்கம் ஒன்று அமைத்தார் குமுத சந்திரன், துப்பாக்கி சுடும் பயிற்சி முதலிய இரகசியப் பயிற்சிகளை அடைந்து - இந்தியாவில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பிரிட்டிஷ்காரர்களைச் சுட்டுத் தள்ளுவது அதன் நோக்கம். அந்த நோக்கத்தின்படி முதல் பிரிட்டிஷ் ஆளாக அவர்கள் தேர்ந்தெடுத்த உள்ளூர் கலெக்டர் துரையைச் சுட்டு முடித்ததுமே, சதித் திட்டம் எப்படியோ வெளியாகி விட்டது. புரட்சிச் சங்கத்தில் குமுத சந்திரனைத் தவிர அனைவரும் போலீஸில் பிடிபட்டுச் சிறையிலடைக்கப்பட்டு விட்டனர்.

குமுத சந்திரன் மட்டும் தலைமறைவாகி, இதோ இப்போது காவிய கங்கையாக உருவாகியிருக்கிறதே - இந்த மலையடிவாரத்துக் காட்டுப் பகுதியில் ஒரு பாழ்மண்டபத்தைப் புகலிடமாகக் கொண்டு வசித்து வந்தார். அப்போது அவரை ஆதரித்து- அவர் மறைந்து வாழ உதவி செய்து அவருடைய உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்தவள் இந்தப் பளிஞர் யுவதிதான், இவள் இல்லாவிடில், அவர் தலைமறைவாக வாழ்ந்திருக்க முடியாது. நல்ல மன வளர்ச்சி மிக்க பருவத்தில், தேசபக்தி எழுச்சியும் இயற்கை எழில் மிக்க மலைச்சாரல் சூழலும், தலைமறைவு வாழ்க்கையுமே அவரைக் கவிஞராக்கின.

ஒரு மழைக் கால இரவில் அவருக்காக உணவு தேடி வரச் சென்ற அவள் வருகிற வழியில் காட்டாற்றில் அளவற்றுப் பெருகிய வெள்ளம் காரணமாக அடித்துப் போகப்பட்டாள்.

‘ஒளி திரும்பாத இரவு’ - என்று அன்று அவர் எழுத எண்ணிய கவிதை துயர அழுத்தத்தால் வெகு நாள் உருப் பெறவே இல்லை. முதலில் அவர் எழுத முயன்ற, எழுதத் தவித்த கவிதை அதுதான். ஆனால், அது இன்று வரை எழுதப்படவே இல்லை. இந்த நிகழ்ச்சிக்குப் பின் அவர் அந்த மலையடிவாரத்தை விட்டே வெளியேறிப் பிரிட்டிஷ் அதிகாரம் செல்லுபடியாகாத பிரெஞ்சுப் பகுதி ஒன்றிற்குப் போய்ப் பல வருஷங்கள் இருந்தார். நிறையக் கவிதைகள், நூல்கள் எழுதினார். புகழ் பெற்றார். உலகப் பிரசித்தி பெற்ற பரிசுகள் கிடைத்தன. பொருள் சேர்ந்தது.

பின்னால் ‘காவிய கங்கை’யை அமைக்க முடிவு செய்த போது ஞாபகமாகத் தம்மைத் தமது பழைய தலை மறைவு வாழ்க்கைக் காலத்தில் கவியாக்கிய இதே இடத்தைத் தேர்ந்தெடுத்தார் கவி சிரேஷ்டர் குமுத சந்திரர்”