பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

950 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

‘பி.எஸ்.பி.’ யின் விமர்சனம் சில சமயங்களில் பக்தர்கள் புரிந்துகொள்ள முடியாத ‘பரம்பொருள் தன்மை’ போல் ஆகிவிடும். அவருடைய விமரிசனக் கணைகளுக்கு நிகழ்கால ஆசிரியர்கள் மட்டுமல்லாமல் கடந்தகால மேதைகளும் ஆளாவதுண்டு. ஒரு முறை, “கம்பனில் சில பகுதிகளைத் தவிர மற்றவைகளைக் குப்பைத் தொட்டியில் போட வேண்டியதுதான்” என்று ஒரு கருத்தை வெளியிட்டு அது காரசாரமான அபிப்ராய பேதங்களைக் கிளப்புவது கண்டு மகிழ்ந்தார். இன்னொருமுறை ‘திருக்குறளைத் தலையைச் சுற்றி நெருப்பில் போடவேண்டும்’ என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார்.இவ்வளவுக்கும் திருக்குறளையோ கம்பனையோ அவர் முழுதும் படித்ததுகூட இல்லை. ஏனோ காரணமில்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள் மேல் ஏற்பட்டுவிட்ட ஒரு வெறுப்பைப் போலக் கம்பன்மீதும் குறள்மீதும்கூட அவருக்கு வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. முதல் நாள் கம்பனையும், திருவள்ளுவரையும் இப்படித் தூக்கி எறிந்து எழுதிய இதே பேனாவால் மறுநாள் யாருக்கு அதில் எந்த நயமிருக்கிறது என்றே புரியாத ஒர் ஏழாந்தரமான கொச்சைத் தமிழ் நாவலை - முதல் தரமானது என்று பாராட்டிப் புகழ்மாலை சூட்டுவார்.பி.எஸ்.பி. கம்பனை ஏன் குறை கூறுகிறீர்கள்? - என்று கேட்டால்,“மில்டனைப் போலவோ, ஹோமரைப் போலவோ அவன் பாடவில்லையே?” என்று விநோதமாக அதற்கும் ஒரு பதில் ரெடிமேடாய் வைத்திருப்பார்.

"அது ஏன்? கம்பன் எதற்காக மில்டனையும், ஹோமரையும் போலிருக்க வேண்டும்?” - என்று கேட்டால் பதில் வராது அவரிடமிருந்து,

"இன்ன நாவலைப் புகழ்கிறீர்களே; அது ரொம்ப சுமாராக இருக்கிறதே?” என்று கேட்டாலோ,

“அதெப்படி? ஜேம்ஸ் ஜாய்ஸ், காஃப்கா போன்று தமிழில் எழுத முயன்றிருக்கிறாரே அவர்?” என்பதாக அதற்கும் ஒரு விநோதமான பதில்தான் வரும் அவரிடமிருந்து விநோதமில்லாத பதில்கள் அவரிடமிருந்துதான் வராதே. தமிழை எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என்று சொல்கிற அவர் தெரியாத காரணத்தால் யாராவது இங்கிலீஷில் சிறு தவறுபட எழுதினாலோ, பேசினாலோ, அசிங்கமாகக் கேலி செய்வார். அதற்கு என்பதை 'அதுக்கு’ என்றும் சிறியது” என்பதைச் சின்னது என்றும் தோன்றினாற் போலத் தமிழில் தாம் எழுதுவதை மற்றவர்கள் கேலி செய்ய முடியாதபடிமிரட்டிவைத்திருக்கும் அவர்-மற்றவர்களைத் தாராளமாகக் கேலி செய்வார். சுதேசி மனப்பான்மையோடு சுதேசி மொழிகளையும் நூல்களையும் விமர்சனம் செய்து வந்தார் அவர். அவருடைய விருப்புக்கள் விநோதமானவை. வெறுப்புக்களும் கூட விநோதமானவை.

பன்னிராயிரம் பொற்கொல்லர்களைப் பலிகொடுத்துக் கண்ணகிக்கு விழாக் கொண்டாடினானாமே ஒரு பைத்தியக்காரப் பாண்டியன்; அதுபோல் முடிந்தால் தொண்ணுாறாயிரம் தமிழ்ப் பண்டிதர்களைக் காவு கொடுத்துப் புதுமை இலக்கியத்திற்கு ஒரு விழாக் கொண்டாட வேண்டுமென்பது அவர் ஆசை. நல்ல வேளையாக அந்த ஆசை இன்றுவரை நிறைவேறவில்லை. ஆனால், வேறு ஒர் ஆசை