பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/337

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131. பகைமையின் எல்லை

ஹாஸ்டலுக்கு எதிரே இருந்த பூங்காவில் நடுநாயமாக விளங்கியது அந்த மகிழ மரம் தழைத்துப் படர்ந்து பசுமை கவிந்த அதன் கீழ் அன்று சுபத்ராவும் மாலதியும் தனியாகப் பிரிந்து வந்து உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். ஊசி ஊசியாக மெல்லிய பூஞ்சாரல் விழுந்து கொண்டிருந்தது. அதில் நனைந்து கொண்டே புல்வெளியில் கும்பல் கும்பலாகக் கூடி அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர் மற்ற மாணவிகள். மகிழ மரத்தடியில் சுபத்ராவும் மாலதியும் மட்டும் அமர்ந்து தங்களுக்குள் ஏதோ சம்பாஷித்துக் கொண்டிருந்தனர்.

பேச்சுக்கு நடுவே எப்படியோ, சுபத்ரா, நாராயணனைப் பற்றி ஏதோ சொல்ல வேண்டியதாகப் போயிற்று. அவ்வளவுதான், அவள் சரியாக மாலதியிடம் மாட்டிக் கொண்டு விட்டாள்.

“ஏண்டி சுபத்ரா! உனக்கு அந்த ‘தரித்திர’ நாராயணனைப் பற்றிப் பேசா விட்டால் பொழுது போகாதோ? நல்ல நாராயணன் வந்தானடி! ஆமாம்! அவனுக்குக் குளிப்பதற்கு, சாப்பிடுவதற்கு, தூங்குவதற்கு ஏதாவது நேரம் மீதி இருக்கிறதோ, என்னவோ? ஐயோ பாவம்! உன் நாராயணன் காலேஜ் படிப்பை முடித்து விட்டு வெளியேறும்போது அதிகப் படிப்பினால் மூளைக் கோளாறாக முடிந்து கீழ்ப்பாக்கத்திற்குப் போகாமல் இருக்க வேண்டும்!” - மாலதி தன் வெண்கலச் சிரிப்பிற்கிடையே சுபத்ராவைக் கிண்டல் செய்தாள்.

சுபத்ரா, அர்த்த புஷ்டியோடு கூடிய புன்னகை ஒன்றை இதழ்களில் ஓடவிட்டுக் கொண்டே மாலதிக்கு விடை கூறினாள்: “உனக்கு என்ன குரோதமோ தெரியவில்லையேடி! அந்த நாராயணனைப் பற்றிப் பேசத் தொடங்கினாலே கரித்துக் கொட்டுகிறாயே? ஏ அப்பா! தான் உண்டு, தன் காரியம் உண்டு என்று இருக்கிற மனிதனை உலகம் எவ்வளவு குரோதம் பாராட்டுகிறது? நீ மட்டும் இல்லையடி மாலு! இந்தக் காலேஜில் படிக்கும் அத்தனை அரட்டைக் கல்லிகளும் நாராயணன் என்றால் கரிக்கிற கரிப்பு... அதைச் சொல்லி முடியாது. ‘புத்தகப் புழு, புத்தகப் புழு’ என்று வாய்க்கு வாய் திட்டி ஆளைக் கோட்டாப் பண்ணி விட்டால் உங்களுக்கு என்னதான் பிரயோஜனம் கிட்டுகிறதோ? படிப்பில் ஒரு மண்ணையும் காணோம்! கேலிக்கு மட்டும் குறைச்சலில்லை. நாராயணன் கால் தூசி பெற மாட்டீர்கள்!” - சுபத்ராவின் பேச்சு விளையாட்டாகப் பேசப்பட்டதுபோல இருந்தாலும் மாலதிக்கு அதைக் கேட்டதும் கோபம் வந்து விட்டது.

அவள் சுபத்ராவை உறுத்துப் பார்த்த பார்வையில் அந்தக் கோபம் பளிங்கிலே பிரதிபலிக்கும் சிவப்பு நூல் போல வெளிப்படையாகத் தெரிந்தது.சுபத்ரா, சட்டென்று