பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/341

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

————————இரண்டாம் தொகுதி/பகைமையின் எல்லை 🞸 963

கந்தக அமிலத்தில் இரண்டொரு துளிகளைத் தற்செயலாகக் கொட்டி விடுவது போல நாராயணன் வேஷ்டியிலே தெறிக்கச் செய்வாள். அமிலம் தெரித்த இடங்களிலே வேஷ்டி எரிந்து வட்ட வட்டமாகக் கருகிப்போகும். நாராயணன் தலைநிமிர்ந்து தன் வேட்டியையும் அவளையும் இமை கொட்டாமல் மாறிமாறிப் பார்ப்பான். கம்பீரமான அந்தப் பார்வை அவளை அம்பாகத் துளைக்கும். “தவறிப் பட்டுவிட்டது, மிஸ்டர்! மன்னித்துவிடுங்கள்” என்று உதட்டிலிருந்து பிறந்த அனுதாபமற்ற போலிச் சொற்களால் பூசி மெழுகி மன்னிப்புக் கேட்பதுபோல நடிப்பாள் அவள். அப்படி அவள் மன்னிப்புக் கேட்பது போன்ற பாவனையிற் பேசிய பின்பாவது, ‘பரவாயில்லை’ என்ற ஒரே ஒரு வார்த்தையாவது நாராயணன் வாயிலிருந்து வெளி வரவேண்டுமே! அதுதான் இல்லை! வெளிப்படையாக நாராயணனின் பரம வைரிபோல் நடந்து கொண்ட மாலதி, உள்ளுர அந்த ஒரே ஒரு வார்த்தைக்காகத் தவித்தாள் - ஏங்கினாள் என்றே சொல்ல வேண்டும்.

“காலேஜில் தமிழ் வகுப்பு நடந்து கொண்டிருக்கும். நாராயணன் தமிழ்ப் புரொபஸர் கூறுவதில் ஆழ்ந்த ஈடுபாட்டுடனே கவனத்தைச் செலுத்திக் கொண்டிருப்பான். சுற்றி மடித்த காகிதச் சுருள் ஒன்று பெண்கள் பகுதியிலிருந்து அவன் டெஸ்கின்மேல்வந்து விழும்.அதை வீசி எறிந்து விட்டு ஒன்றும் தெரியாதவள் போலப் பாடத்தில் கவனங்கொண்டு விடுவாள் மாலதி, புரொபஸர் கண்கள் கண்டு கொள்ளாமல் நடக்கும் இந்தக் கடிதத் தாக்குதல்.ஆனால், பாடத்தை முடித்துவிட்டுப் புரொபஸர் அங்கிருந்து வெளியேறும்வரை நாராயணன் அந்தக் காகிதச் சுருளைக் கையால் தொடக்கூட மாட்டான். புரொபஸர் இருக்கும்போது அதைப் பிரித்து அவரிடம் காட்டிவிட அவனுக்குத் தெரியாது என்பதில்லை. அவன் அப்படிச் செய்தால் மாலதிக்கு ஒரு ‘ரிமார்க்’கும் ‘ஃபைனு’ம் நிச்சயமாகப் பழுத்துவிடும். அதோடு போகாமல் நாராயணன்மேல் அதிகமான அன்பும் அனுதாபமும் கொண்ட அந்தப் புரொபஸர் வகுப்பில் அத்தனை பேருக்கும் நடுவில் மாலதியைத் தலைகுனியச் செய்துவிடுவார். நல்லவேளையாக நாராயணன் அதற்கெல்லாம் இடமளிக்கவில்லை. கடிதத்தைப் பிரித்துப் பார்த்தால் நாராயணனைப் பற்றி ஏதாவது இகழ்ந்து எழுதியிருப்பாள். சில சமயங்களில் அது ஒரு கவிதை போலக்கூட அமைந்திருக்கும்.

"கொட்டை வட்டக் கடுக்கன்
கொப்பரைக் காய்க் குடுமி
நெட்டை வற்றல் உருவம்
நீண்ட மூக்குச் சாமி?"

என்று ஏதோ அவளுக்குத் தோன்றியதைக் கைபோனபோக்கில் எழுதியிருப்பாள். நாராயணனை இகழ்வதாக எண்ணிக்கொண்டு அவள் இதை எழுதியிருந்தாலும் நாராயணன் இதைப் படித்துவிட்டு அலட்சியமாகத் தனக்குள் சிரித்துக்கொள்வான். சிரித்துக் கொண்டே அதே காகிதத்தில் அந்தப்பாட்டின் கீழேயே,