பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

970 🞸 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்—————————————————

கண்டக்டர் இரண்டு ஆள்களுக்குத்தான் இடமிருக்கிறது என்றான். எனக்கு முன்னால் நின்று கொண்டிருந்தவர் ஏறிவிட்டார்.நான் ராஜத்தைப் பார்த்துத் தயங்கி நின்றேன்.

“என்ன சார் ஏறவில்லையா?” முதலில் ஏறியவர் பஸ்ஸிலிருந்து தலையை வெளியே நீட்டி, என்னைப் பார்த்துக் கேட்டார். நான், “இல்லை! நீங்கள் போங்கள் வீட்டில் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்.” என்றேன்.

“அடேடே அப்படியானால் நீங்கள் இருவரும் முதலில் ஏறிக் கொள்ளுங்கள். எனக்கு அவசரமில்லை.நான் அடுத்த பஸ்ஸில் வருகிறேன்”. அவர் இறங்கி விட்டார்.

நானும் ராஜமும் ஏறிக்கொண்டோம். பெண் கூட வந்தால், அதை ஒட்டி ஆணுக்குத் தனிமதிப்புத்தான்.பச்சாத்தாபத்தை வருவிக்கும் சக்தி அப்படி என்னதான் பெண்ணிடம் இருக்கிறதோ?

திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை சோமவாரம்! கூட்டம் ஜே ஜே என்றிருந்தது. கூட்டத்தில் நுழைந்து, தரிசனத்தை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது மணி நாலே கால்.

"அப்படியே பஸ் ஸ்டாப்பிற்குப் போய் பஸ் ஏறி, டவுனுக்குத் திரும்பிவிடவேண்டும்” என்றேன் நான்.

‘வெகுநாளாக எனக்கு ஒரே ஒர் ஆசை.அதை இன்று நிறைவேற்றிக் கொண்டுவிட நினைக்கிறேன். கிரிப் பிரதட்சிணம் செய்வோம்! வாருங்கள்” என்றாள் அவள்.

“அதெல்லாம் இப்போது முடியாது! ஒன்றரை மைல் இரண்டு மைல் நடக்க வேண்டுமே? இன்னொரு நாள் பார்க்கலாம். இன்றைக்கு வேண்டாம்.”

“முடியாது! இன்றைக்கு நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்கப் போவதில்லை.செய்வதுதான் செய்யப்போகிறோம்.கார்த்திகை சோமவாரத்தில் கிரிப் பிரதட்சணம் செய்தால், எவ்வளவோ நல்லது. வாருங்கள், அதிகமாகப் போனால் ஒன்றரை மணிநேரத்திற்கு மேல் ஆகாது” அவள் பிடிவாதம் பிடித்தாள்.

அவள் இஷ்டத்தைத் தான் கெடுப்பானேன்? கிரிப்பிரதட்சிணத்தை முடித்துக் கொண்டு ஆறரை மணிக்கு ரயிலில் மதுரைக்குத் திரும்பிவிடலாம் என்று எண்ணினேன். கிரிப்பிரதட்சிணம் முடிகின்ற இடத்தில் மேற்கு ஒரமாகத்தான் ரயில்வே ஸ்டேஷனும் இருந்தது. பஸ்ஸைவிட ரயிலில் சுலபமாக இடம் கிடைக்கும்.

“சரி வா” என்று கூட்டிக்கொண்டு கிழக்குப்புறமாக மலையடிவாரத்திலிருந்து கிரிப்பிரதட்சிணத்தை ஆரம்பித்தேன்.

அந்தப் பழைய பெருமிதம் - ராஜம் பக்கத்திலே தோளோடு தோள் நடந்து வருகிறாள் என்ற கர்வம் - தனிமையையும் துணையாக்கிக்கொண்டு மனத்தில் நிலவியது. சாதாரணமாகப் புதிதாகக் கல்யாணம் செய்து கொண்டவர்களுக்கு இந்த மாதிரி ஒரு கர்வம் இருப்பதும் ஏற்படுவதும் இயற்கை. ஆறு, ஏழு வருஷங்கள் நெருங்கி வாழ்ந்த பிறகும் அந்த உணர்விலிருந்து என்னை நான் விடுவித்துக்கொள்ள