பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/390

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1012

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

எப்போதாவது எனக்கு வேலை கிடைத்து விட்டால் அதற்குள் நான் பைத்தியமாகி, அதைப் பார்க்க முடியாமல் கூடப் போகும்படியும் ஆக்கி விடலாம் இந்த அநுதாபம்.

கடிகாரத்தைப் பார்த்தேன். மணி பன்னிரண்டு; தூக்கத்தைப் பற்றியே நினைவில்லை. பலவந்தமாகக் கண்ணிமைகள் மூட முயன்றன. மூடிய இமைகளுக்குள் இந்த விசாரணைப் பிரமுகர்கள் ஒருவர் விடாமல் வந்து மானஸிக விசாரணையை மறுபடியும் நடத்தினார்கள். தூக்கம் வரவில்லை. போர்வையை நீக்கி விட்டு எழுந்தேன். அதே சமயத்தில் கதவைத் திறந்து கொண்டு பெட்டி படுக்கை முதலியன சகிதமாக என் அப்பா உள்ளே நுழைந்தார். அப்போதுதான் கதவைத் தாழ்ப்பாள் போடாதது என் நினைவுக்கு வந்தது. ஆச்சரிய மிகுதியினாலோ வேறு எதனாலோ”வாருங்கள் அப்பா” என்று கூடச் சொல்ல வாய் மறுத்து விட்டது.

“ஏண்டா, இன்னுமா தூங்காமல் இருக்கிறாய்? உடம்பு எதற்கு ஆகும்? வேலை போனவனெல்லாம் செத்தா போய் விட்டான்கள்? நல்ல பைத்தியக்காரத்தனமடா, இது. ஆமாம்! நான் போட்ட கடிதம் உனக்குக் கிடைக்கவில்லையா? மதுரை பாசஞ்சரில் பதினொன்றரை மணிக்கு வருவதாக எழுதியிருந்தேனே.”

அப்பா பேசிக் கொண்டே போனார்.

அறையின் ஒரு மூலையில் ஜன்னல் வழியாக எறியப்பட்டிருந்த ஒரு கடிதம் என் கண்ணில் பட்டது. கையில் எடுத்தேன்.

“செங்கற்பட்டில் நண்பரொருவர் வீட்டுக் கல்யாணத்திற்குப் போக வேண்டும். நாளை இரவு பதினொன்றரை பாசஞ்சரில் வருகிறேன். நீ தூக்கம் விழித்து ஸ்டேஷனுக்கு வர வேண்டாம். நானே ரூமுக்கு வந்து விடுகிறேன். உன் வேலை போய் விட்ட விஷயம் ராமு மூலம் அறிந்து கொண்டேன். அதற்காக மனசை அலட்டிக் கொள்ளாதே. வீண் கவலை வேண்டாம். அதை நீ எனக்கு எழுதாததற்கு நான் வருத்தப்படுகிறேன். உள்ளுர் ஹைஸ்கூல் ஒன்றில் எல்.டி. கிடைக்காததால், கிராஜ்வேட் வேண்டுமென்று கேட்டிருந்தார்கள். அதை உனக்கு ஏற்பாடு செய்து விட்டேன். வாத்தியார் மகன் வாத்தியாராகவே ஆகி விடு. அங்கே உன்னை யாரும் ரிலீவ் செய்யமுடியாது. உன் அப்பா'

இவ்வளவுதான் கடிதத்தில் என் கண்ணில் பட்டது. அப்பாவின் அநுபவம். என் வேதனையை ஒரு நொடியில் போக்கும் இரண்டு வாக்கியங்களாக அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. “வேலை போனவனெல்லாம் செத்தா போய் விட்டான்? வீண் கவலைப்பட்டு மனசை அலட்டிக் கொள்ளாதே.” இவைகள்தான் இந்த அமுத வார்த்தைகள். இவைகளைத் திரும்ப இன்னொரு தடவை படித்தேன். அதற்கும் மேலாக அவர் கடைசியில் எழுதியிருந்த இரு தொடர்கள் என்னுள்ளத்திலிருந்த புண்களை நிரந்தரமாக அப்புறப்படுத்தி விட்டன. நான் அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினேன்.