பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/426

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1048

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

கம்பெனி மானேஜிங் டைரக்டர், வடக்கே இருந்து வரும் வியாபாரப் பெரும் புள்ளிகளுக்கு ‘ஏற்பாடு’ செய்ய, நயினாரின் தயவை நாடப் போக முடிவில் அது வடிவேலுவுக்கும் பழக்கமாகி விட்டது. அவ்வப்போது ஆசைத் தீயை மூட்டி விட ‘நயினார்’ இருக்கவே, கேள்விமுறையில்லாமல் ஆசையும் கொடிகட்டிப் பறந்தது வடிவேலுவுக்குள்ளே.

தங்கள் கம்பெனி விருந்தாளியாக வந்து தங்கும் பெரும்புள்ளிகளுக்குப் ‘புட்டிகளும் குட்டி’களும், ஏற்பாடு செய்யவென்று தான் பழக்கப்படுத்திக் கொண்ட நயினார் நாளடைவில் அதே ஏற்பாட்டை வடிவேலுவுக்கும் செய்யத் தொடங்கி விட்டான். பெரிய வாடிக்கை தருபவர் என்ற முறையில் வடிவேலுவுக்குக் கொஞ்சம் தாராளமாகவே இதில் சலுகையும் காண்பித்தான்.

வடிவேலுவின் சிந்தனை கலைந்தது.

“பில்லு வேண்டியதில்லே. டோட்டல் சொல்லுப்பா” என்றான் அந்த வாடிக்கைக்காரன். அதையும் ,இதையும் எழுதிக் கூட்டிக் கழிப்பது போல் பாவனை செய்து விட்டு வந்த கூட்டல் தொகையோடு மேலும் ஒரு நூற்றிருபது ரூபாய் சேர்த்து, இரண்டாயிரத்திப் பதினேழு ரூபாய் இருபத்தேழு காசு ஆவதாகத் தெரிவித்தார் வடிவேலு.உண்மையில் ஆன தொகை ஆயிரத்துத் தொள்ளாயிரத்துச் சொச்சம்தான். ஒரு நம்பிக்கை வருவதற்காகத் துல்லியமாகக் கூட்டிச் சொன்னதுபோல் இரண்டாயிரத்துப் பதினேழு ரூபாய் இருபத்தேழு காசு என்பதாகச் சொல்லியிருந்தார். ஆந்திரா ஆள் கையிலிருந்த பணத்தை வடிவேலுவின் முன் வைத்து விட்டு, அதை வடிவேலுவே எண்ணுகிற வரை காத்திருந்தான்.

வடிவேலுவின் சாமர்த்தியம் எப்போதுமே சோடை போனதில்லை.

“நீ என்னா கொடுத்தே?”

“ரெண்டாயிரத்துப் பத்து இருக்கு-தய சேசி. கொஞ்சம் கமிஷன் ஈவண்டி…”

“சரி போப்பா.. ஏழு ரூபா இருபத்தேழு பைசா உனக்குக் கமிஷனா வச்சுக்க. நீ அதைத் தர வேண்டாம்…”

- உண்மையில் அவன் கொடுத்த நோட்டுக் கற்றைகளை எண்ணினால், இரண்டாயிரத்து முப்பத்தைந்து ரூபாய் இருந்தது. அவனே இரண்டாயிரத்துப் பத்து என்று சொல்லியதனால் வடிவேலுவுக்கு மிகவும் வசதியாகப் போயிற்று. ஞாபக மறதியாலோ, அல்லது எண்ணிக்கை தவறுதலினாலோ அந்த ஆள் இருபத்தைந்து ரூபாயைக் குறைத்துக் கணக்கிட்டிருக்க வேண்டும். சரியான வாத்து மடையன்.

மனச்சாட்சி உறுத்தியதாலோ என்னவோ, மறுபடியும் எண்ணினார் வடிவேலு. சந்தேகமே இல்லை. இரண்டாயிரத்து முப்பத்தைந்து ரூபாய்தான் இருந்தது. நூற்று இருபத்தைந்து ரூபாய்க்கு மேல் சுளையாக லாபம்.

“பாக்கி...” வாடிக்கைக்காரன் இப்படித் தொடங்கி என்ன சொல்ல வந்தானோ தெரியவில்லை.அதற்குள் வடிவேலுவே முந்திக்கொண்டு அவனை இடைமறித்து,