பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/459

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148. விசிறி

னத்தில் புழுக்கமாக இருந்த ஒரு வேதனையான சூழ்நிலையில் மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர் அவளை அறிமுகம் செய்து வைத்தார். அறிமுகம் பதிவதாக அமைந்திருந்தது.

அந்த மன நிலையில், அந்தச் சூழ்நிலையில் அவளுடைய அறிமுகம் இதமாகவும், மனப் புழுக்கத்தைத் தணிப்பதாகவும் இருந்தது. உணர்வில் உல்லாசத்தைக் கலந்தது. “இவள் மாதவி, கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறாள். உங்கள் விசிறி.” அவளிடமிருந்து மனத்தைக் கிறங்க அடிக்கிற ஒரு புன்னகை, ஒரு கை கூப்பல் ஆகியவை இந்த அறிமுகத்தோடு உடன் நிகழ்ந்தன. அவளே அழகாக இருந்ததால், புன்னகையும் கைகூப்பலும் அந்த அழகை அதிகமாக்கிக் காண்பித்தன.

“ரசிகை என்று சொல்லுங்கள். விசிறி என்ற வார்த்தை எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. சினிமா நாடக அன்பர்கள் வேண்டுமானால் அப்படிச் சொல்லிக் கொள்ளட்டும்; இலக்கியத்திற்கு விசிறிகள் வேண்டாம், ரசிகர்கள்தாம் வேண்டும். ரசிகன் கண் மூடித்தனமானவன் இல்லை; ஆனால் விசிறி கண் மூடித்தனமானவன்.”

“உங்கள் எழுத்துக்களைப் பொறுத்தவரை இவளும் கண்மூடித்தனமானவள் தான்.”

அவருடைய அறிவு இந்தக் கண்மூடித்தனத்தை வெறுத்தது. உணர்வு அதை விரும்பி வரவேற்றது.

“உங்கள் எழுத்துக்களை விமர்சனம் செய்ய முயலுபவர்களோடு, செய்பவர்களோடும் கூட இவள் சண்டை போட்டிருக்கிறாள்.”

“சண்டைகள் சந்தைகளில் நடக்கலாம். ஆனால், இலக்கியத்தில் எவ்வளவு பெரிய கருத்து வேறுபாடானாலும், அது அபிப்ராய பேதம் என்ற எல்லையைத் தாண்டிச் செல்ல முடியாது; செல்லக் கூடாது.”

“உங்கள் மேலுள்ள அபரிமிதமான பிரியத்தின் காரணமாக உங்களை எதிர்ப்பவர்களே இருக்கக் கூடாது என்று நினைக்கிற அளவுக்குப் பிடிவாதம் உள்ளவள் இவள்.”

கேட்பதற்குக் கர்வமாக இருந்தது அவருக்கு. அறிவுக்கு உவப்பளிக்காத இந்தக் குருட்டுப் பக்தி-உணர்வுக்கு இதமாக இருந்தது.

அடுத்த தடவை முதலில் அறிமுகப்படுத்திய நண்பர் இல்லாமல், மாதவியே. கல்லூரியிலிருந்து வீடு திரும்பும் போது தானாக அவரைத் தேடிக் கொண்டு வந்தாள்.