பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/463

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / விசிறி * 1085

தப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உங்கள் விசிறிக்கு நீங்கள் உதவி செய்யணும்”

“என்ன செய்ய வேண்டும்?”

“இது காலேஜ் போட்டிக்கு நான் எழுதிய கவிதை. இதெல்லாம் நான் பல சமயங்களில் எழுதிய கதைகள், குறுநாவல்கள். சிரமத்தைப் பாராமல் நீங்க கொஞ்சம் படிச்சுத் திருத்திக் கொடுக்கணும்.”

பற்றிக் கொண்டு வந்தது அவருக்கு. ‘நான் இவளுக்கு புக் ரீடரா என்ன?’ என்ற எரிச்சலோடு எண்ணிக் கொண்டே அதை முகத்தில் காட்ட முடியாமல் அசடு வழிய முகமலர்ந்து சிரித்தார். எதிரிகளைவிட விசிறிகள் அபாயகரமானவர்கள் என்று புரிந்தது அவருக்கு தம்முடைய கதையைப் படித்தது பற்றி அவள் ஏதாவது கூறுவாள் என்று எதிர்பார்த்தது வீணாயிற்று.

அவள் தன் கவிதையை அவர் திருத்திக் கொடுத்து வாங்கிக் கொள்வதற்காகக் காத்திருந்தாள். “மத்ததை எல்லாம் நீங்க அப்புறமாகக்கூடப் படிச்சுக் கொள்ளலாம். கவிதை மட்டும் கொஞ்சம் அவசரம், போட்டிக்குக் கொடுக்கணும்.”

கவிதையைப் பிரித்து அவள் முன்னிலையிலேயே படிக்கத் தொடங்கினார். ‘செந்தமிளில் கவிபாட ஸிந்தித்தேன்’ என்று கவிதை ஆரம்பமாகியது. 'தமிழ்' என்பதற்கு எந்த எழுத்துச் சரியானது என்பதுகூடத் தெரியாமல் எழுதப் புறப்பட்டுவிட்ட அந்த விசிறியை அவர் ஏறிட்டுப் பார்த்தார்.குறை சொன்னால், என் மேல் உங்களுக்குப் பொறாமையா, ஸார்? என்று மேலும் தன்னோடு அவளைச் சமப்படுத்திக் கொண்டு அவமானப்படுத்திக் கொச்சையாக்கிவிடுவாளோ என்று பயமாயிருந்தது அவருக்கு அதனால் அவளை எதுவும் கேட்கவில்லை.

அது ஏசி அறையாயிருந்தும் வெளியே மழைக் குளிர்ச்சி இருந்தும் திடீரென்று புழுக்கம் அதிகமாவது போல் உணர்ந்து குளிர்ச்சித் திரிப்பானை அதிகமாக்கினார். அவர் முகத்தில் வியர்த்துவிடும் போலிருந்தது.

முதல் தடவையாக விசிறி அருகே இருந்தும் அதிலிருந்து காற்று வராமல் புழுக்கம் மட்டுமே வருவதை உணர்ந்தார் அவர்.

(கலைமகள், தீபாவளி மலர், 1981)