1166 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
சமாளித்து மெல்ல மெல்ல முன்னேறி அக்கரையை அடையப் பத்துமணி ஆகிவிட்டது. நல்ல கும்மிருட்டு.
பூங்குன்றம் அடங்கியிருந்தது. ஊர் நாய்கள் அத்தனையும் ஒன்றாக அவன் வரவை எதிர்த்துக் கோரஸ் பாடின. அவன் கவிஞரின் தோட்டத்தை அடைந்து மூங்கில் படலால் ஆன வாசல் கதவைத் திறந்த போது அவர் விழித்திருந்தாலும் யாரது!' என்று கவிஞரின் மனைவி குஞ்சம்மாள்தான் எதிர்கொண்டு வந்தார். “நான் தான் குமரகுரு. தந்தி வந்திருக்கு..” என்று பதில் குரல் கொடுத்தான் அவன்.
"ஐயா தூங்கலையா ஏன் இன்னும் முழிச்சிக்கிட்டிருக்காரு?”
“வேலையென்ன? அடைமழையும், ஈரமும் தாங்காமே தோட்டத்தில் இவர் வச்சிருந்த சண்பக மரக்கன்று அழுகிப்போச்சாம். ரெண்டு நாளா அதே புலம்பல்தான்! அது சரி, ஏதோ தந்தீன்னு சொன்னியே.?”
"ஆமாம்மா! ஐயாவுக்கு இந்த வருஷக் காவிய பீடப் பரிசு அஞ்சு லட்ச ரூபாய் கிடைச்சிருக்கு..!.”
"நிஜமாவா? எங்கே தந்தியைக் குடு.”
தந்தியைக் கிருக லட்சுமியான அந்த அம்மாளிடம் கொடுத்தான் குமரகுரு. அந்தம்மாள் ஒடிப்போய் அவரிடம் கூறினாள். அவரோ ஒரு சிறிதும் சலனமோ, பரபரப்போ அடையாமல் தலைக்கு மேலே பொழியும் தங்கமழையைக் கவனிக்காமல் காலடியில் உடைந்துவிட்ட மண் பொம்மைக்காக அழும் குழந்தையைப்போல்,
'குமரகுரு!' நான் அத்தனை சிரமப்பட்டும் பிரயோசனமில்லே! அந்த செண்பகக் கன்னு ஈரத்திலே அழுகிப் போச்சுப்பா..” என்று அழமாட்டாத குரலில் கலக்கத்தோடு ஆரம்பித்தார். அவர் மனைவி குறுக்கிட்டு அவரைக் கடிந்து கொண்டாள்.
“அஞ்சு லட்ச ரூபாய் அவார்டு வந்திருக்குன்னு இந்த அடைமழையிலே தந்தியோட ஓடிவந்திருக்கான். நீங்க என்னடான்னா..?”
“மழைக்காலம்னு தெரிஞ்சதும், அந்தச் செடியைத் தொட்டியிலே மாத்தி வீட்டு வராந்தாவிலே வைக்காமப் போன என் புத்தியைத்தான் செருப்பாலடிக்கனும்!”
அவர் அந்தச் செடி அழுகிப் போன இழப்பிலேயே இன்னும் மூழ்கியிருந்தார்.
உலகின் எந்த ஒரு மூலையிலாவது ஒரு சிறு தளிர் வாடுவதையோ, அழுகுவதையோ கூடத் தாங்க முடியாத இந்த இங்கிதமான மெல்லிய கவி உள்ளத்தை எத்தனை பெரிய பரிசுகளும், லட்சங்களும் வந்தாலும் மூப்படையச் செய்ய முடியாதென்று தோன்றியது குமரகுருவுக்கு 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வரிகளை நினைத்தான். அவர் முகத்தை அந்த மங்கலான அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் கூர்ந்து பார்த்தான். அந்த எழுபத்து மூன்று வயதுக் குழந்தையை அப்படியே கையெடுத்துக் கும்பிட்டான், குமரகுரு.
(சிறுகதைக் களஞ்சியம், 1985)