பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/559

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டாம் தொகுதி / பொய்சொல்லத் தெரியாமல்... * 1181

இரண்டு குற்றச்சாட்டுக்களிலும் தடயங்களாகக் கிடைத்த கையெழுத்துப் பிரதிகள் இரண்டுமே சுமனின் சொந்தக் கையெழுத்தில் தான் இருந்தன. அதில் தான் சிக்கலே உண்டாயிற்று.

அந்தக் கல்லூரியில் காமர்ஸ் கற்பிக்க ஆண் பேராசிரியர்கள் யாரும் கிடைக்கவில்லை. திருமணமாகாத முப்பது வயதுக்கு மேலான சுமதி என்ற பெண் காமர்ஸ் பேராசிரியையாகச் சேர்ந்திருந்தாள். அவள் ஒரு மெண்டல் கேஸ். சுகுமாரனின் மேல் அவளுக்கு ஒரு கண். ஏதோ காமர்ஸ் புத்தகம் தருவதாக ஒரு நாள் வீட்டுக்கு அவனை வரச் சொன்னாள்.

காப்பி, சிற்றுண்டி உபசாரம் எல்லாம் செய்து அவனுடைய கவிதைகளை வானளாவப் புகழ்ந்தாள். சுகுமாரன் தன் கவிதைகள் எதையும் அவளிடம் படிக்கக் கொடுத்ததில்லை. படிக்காமலே தன் கவிதைகளை அவள் எப்படித் துணிந்து புகழ முடியும் என்று அதிர்ச்சியடைந்தான் அவன்.

முதலில் இருந்தே அவள் வற்புறுத்தி வீட்டுக்கு அழைத்தது, உபசரித்தது எல்லாமே சற்று மிகையாயிருப்பதை உணர்ந்த அவன், ஏதோ காமர்ஸ் புத்தகம் தரப் போவதாகச் சொல்லி அவள் தன்னை அங்கே வரச் சொன்னது ஒரு சாக்குத்தான் என்பதைப் புரிந்து கொண்டான்.

“மேடம்' என் கவிதைகளை நீங்கள் எப்போது படித்தீர்கள்? அவை எல்லாமே கையெழுத்துப் பிரதியாக என்னிடம்தானே இருக்கின்றன!.”

“கவிதையைப் படிக்காவிட்டால் என்ன? உன்னை மாதிரி அழகாகவும் இளமையாகவும் இருக்கிற ஒருவர் எழுதுகிற எல்லாமே அழகாகவும், இளமையாகவும்தான் இருக்கும்!”

சுகுமாரனுக்கு அவள் இப்படிப் பேசியது பிடிக்கவில்லை. அவளுடைய சிரிப்பு, பார்வை - அதில் தென்பட்ட சபலம் எதையும் அவன் இரசிக்கவில்லை. அவன் மனத்தில் அவள் தன் ஆசிரியை என்பது மட்டும் நினைவிருந்தது. அவள் மனத்திலும், கண்களிலும், பேச்சிலும், எல்லாவற்றிலும் அவன் தன் மாணவன் என்பது நினைவில்லாததோடு வேறுவிதமான ஆசைகள் தலைநீட்டின.

“என் கவிதை நன்றாக இருக்கிறது என்று நீங்கள் சொல்ல வேண்டுமானால் முதலில் நீங்கள் அவற்றைப் படித்தாகவேண்டும் மேடம்! போலிப்பாராட்டு எனக்குப் பிடிக்காது!. முகமன் வார்த்தைகளை நான் நம்புவதில்லை.” என்று கூறிக் கொண்டே தனது கவிதைகள் தன் கையெழுத்திலேயே எழுதப்பட்டிருந்த நோட்டுப்புத்தகத்தை அவளிடம் எடுத்து நீட்டினான் சுகுமாரன். தன் கவிதைகளைப் படிக்காமலே வேறு காரணங்களுக்காக ஒருவர் தன்னைப் பாராட்டுவது அவனது சுயமரியாதையைப் பாதிக்கக் கூடியதாயிருந்தது.

சிறிதுநேரம் பக்கங்களை முன்னும் பின்னுமாகப் புரட்டிவிட்டு, அவன் எதிர்பாராத நிலையில் சில தாள்களைத் தனியே கிழித்து எடுத்துக் கொண்டுவிட்டாள் அவள்.