பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/560

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1182 நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

"ஏன் தனியே கிழித்து எடுக்கிறீர்கள்?"

"இவை எனக்கு மிகவும் பிடித்த கவிதைகள் என்னிடமே வைத்திருந்து திரும்பத் திரும்ப ஆசைப்படுகிற போதெல்லாம் எடுத்துப் படிக்க விரும்புகிறேன்.

அவன் அந்தக் கவிதைகளின் மூலப் பிரதி தன்னிடம் தனியே இருந்ததனால், 'தொலைந்து போகிறது' என்று அவள் அடாவடித்தனத்தைப் பொருட்படுத்தாமல் விட்டு விட்டான்.

'கவிதைக் காதலிக்கு அந்தரங்கக் கடிதம்- ஒரு நிலாக்காலத்து முன்னிரவில் நீயும் நானும் என்ற தலைப்புக்களில் அவன் எழுதியிருந்த கவிதைப் பிரதிகளைத்தான் அவள் கிழித்து எடுத்துக் கொண்டிருந்தாள்.

அதன் பின்பும் இரண்டொரு முறை அவள் அவனை வீட்டுக்குக் கூப்பிட்டாள். காப்பி, சிற்றுண்டி உபசரணை செய்தாள். மெல்லத் தான் ஆக்கிரமிக்கப்படுவதுபோல் உணர்ந்தான் சுகுமாரன். அவள் தனது சபலங்களுக்கும், ஆசைகளுக்கும் அவனைப் போன்றதோர் இளந்தளிரைப் பலியிட முயல்வது புரிந்தது. அவன் திமிறினான். கோபித்துக் கொண்டு வெளியேறினான். துணிந்து அவளைப் புறக்கணிக்க முற்பட்டான்.

அவள் அடிபட்ட புலியாக மாறினாள். சீறினாள். எங்கே அவன் முந்திக் கொண்டு தன்னைப் பற்றி உள்ளதை உள்ளபடி வெளியே சொல்லி மானத்தை வாங்கிவிடப் போகிறானோ என்று பயந்து, நயவஞ்சகமான தற்காப்பு உணர்ச்சியுடன், "டியூஷன் டியூஷன் என்று என் வீட்டுக்குத் தேடிவந்து என்னிடமே கன்னாபின்னா என்று காதல் கவிதை எழுதி நீட்டிக் கையைப் பிடித்து இழுத்தான்” என்று கல்லூரி முதல்வரிடம் அவனைப் பற்றிப் புகார் செய்துவிட்டாள். சாட்சியங்களாக அவன் கையெழுத்திலேயே இருந்த அந்தக் கவிதைகளையும் இணைத்துக் கொடுத்துவிட்டாள்.

ஏறக்குறைய இதே சமயத்தில் மற்றொரு முனையிலிருந்து இன்னொரு பயங்கரமான புகாரும் சுகுமாரன் மீது வந்தது.

தீவிரப் புரட்சிக் கருத்துக்கள் அடங்கிய கவிதைகளை அவன் எழுதியிருந்த ஒரு நோட்டுப் புத்தகத்தை அவனுடைய ரூம் மேட் அடிக்கடி எடுத்துச் சென்று, இரவில் மாந்தோப்பில் நடக்கும் அதிதீவிர மாணவர் குழுவில் படித்துக் காட்டி விட்டு வருவான். சுகுமாரன், நண்பனின் இந்தச் செயலைத் தடுக்கவில்லை. பக்கத்து ஊரில் விவசாயிகளைக் கொடுமைகள் மூலமும், வட்டிக் கடன் கொடுப்பதன் மூலமும் கசக்கிப் பிழிந்து வந்த ஒரு பணமுதலையைக் கொலை செய்துவிட்டார்கள். அந்த இடத்தில் சுகுமாரனின் கவிதை நோட்டுப்புத்தகமும் சிதறிக் கிடந்தது.பிரித்துக் கிடந்த பக்கத்தில் இருந்த கவிதையிலோ, -

"பொங்கு புதுப்புனல் போல்
புரட்சிப் பெருக்கெடுத்துத்
தங்கு தடையற்ற