1198
நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
இதைச் சொல்லி விட்டுச் செல்லம்மாளையும், மகளையும் ஏறிட்டுப் பார்த்தான் நிலவழகன். ஆச்சி அவர்கள் இருவரையும் சைகை மூலமே கூப்பிட்டு, சமையலறையில் மறுபடி உட்கார வைத்தாள்.
பத்து நிமிஷம் கழித்து ஆச்சி மறுபடியும் இவர்களைச் சமையலறையிலிருந்து கிளப்பி உட்புறம் அழைத்துச் சென்ற போது, நிலாவழகன் கையில் ஒரு தாம்பாளத்தில் வெற்றிலை பாக்கு, பழம், பூ, ஒரு ரவிக்கைத் துண்டு, இரண்டு மஞ்சள் கிழங்கு எல்லாம் வைத்து ஏந்தியபடி நின்றிருந்தான். அதில் ஒரு கவரும் இருந்தது.
“இன்னைக்கி வெள்ளிக்கிழமை... எங்க ஆயா இருக்கிற வரை வெள்ளி தவறாமே யாராச்சும் ஒரு கன்னிப் பொண்ணுக்கு ஒரு ரூவா பணமும், பூவும் வெச்சுக் குடுக்கும். ஆயா பேரைச் சொல்லிக்கிட்டுக் காலங்காத்தாலே வந்திருக்கீங்க. உங்களை வெறுங்கையோட அனுப்புறது நல்லா இருக்காது... தங்கச்சியை வாங்கிக்கச் சொல்லுங்க...”
“கும்புட்டுட்டு வாங்கிக்கம்மா” என்று ஆச்சி மஞ்சுளாவின் காதருகே முணுமுணுத்தாள். தாம்பாளத்தில் சிபாரிசுக் கடிதத்தோடு, ஒரு நூறு ரூபாய் நோட்டும், ஒரு முழு ரூபாய் நாணயமுமாக நூற்றியொரு ரூபாய் வேறு இருப்பதைக் கண்டு பதறிய செல்லம்மாள் “இதெல்லாம் எதுக்குங்க? வேலை கிடைக்கிறதே ஒங்க ஆசீர்வாதம்தானே?” என்று தயங்கினாள்.
“இருக்கட்டும்மா, தங்கச்சிக்கி நல்ல சேலையா ஒண்ணு எடுத்துக் குடுத்து, வேலைக்கு அழைச்சிட்டுப் போங்க...”
ஆச்சி மறுக்காமல் அப்படியே தட்டை வாங்கிக் கொள்ளச் சொல்லி ஜாடை காட்டினாள். செல்லம்மாள், மஞ்சுளா இருவரும் அப்படியே செய்தனர்.
இருவரும் பலகாரம் சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டும் என்று ஆச்சி பிடிவாதம் பிடிக்கவே, மேலும் கால் மணி நேரம் ஆயிற்று,
அங்கிருந்து வெளியேறும் போது தற்செயலாக வீட்டு முகப்பிலே பார்த்தால், அங்கே நெற்றியில் விபூதி, குங்குமம் இல்லாமல், இடுப்பிலும், தோளிலும் பட்டை பட்டையாகக் கட்சிக் கரையிட்ட ஆடைகளோடும், முகத்தில் கடுகடுப்போடும் நிலாவழகன் யாரைப் பற்றியோ எதிரே இருந்தவர்களிடம் இரைந்து கொண்டிருந்தான்: - -
“அப்பிடியாசொல்றான்.அவன்? இன்னா தெனாவட்டு இருந்தா, அவன் அப்பிடிப் பேசணும்…? புக் பண்ணி ஆளை உள்ளத் தள்ளினால்தான் புத்தி வரும்பா அவனுக்கு!”
செல்லம்மாளுக்கு ஆச்சரியமாயிருந்தது. இந்த இரண்டு தோற்றங்களில் எது அசல், எது நிழல் என்பதைப் புரிந்துகொள்வது சிரமம்தான். அதிர்ஷ்டவசமாக நிழலைத் துரத்துகிற அனுபவமோ, கசப்போ தனக்கு ஏற்படாமல் ஆச்சி தன்னைக் காப்பாற்றியிருக்கிறாள் என்றே செல்லம்மர்ள் எண்ணினாள்.