பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/582

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1204 🞸: நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

——————————————

காலையில் வேலைக்கு வருவதாகச் சேட்டிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் அவன்.

“கண்ணப்பன்! நிம்பள் பேரு நம்பள்கி ரொம்பப் பிடிச்சிருக்கு” என்றார் பெரிய சேட் அவர் ‘டிரைவர்’ என்று தன்னைக் கூப்பிடாமல் பெயரைச் சொல்லியே 'கண்ணப்பன்’ என்று கூப்பிட்டது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

‘ஸ்வஸ்திக் ஸ்டீல்ஸ் அதிபர் வீட்டில் அவமானப்படுத்திய மாதிரி இனி அவனை இங்கே யாரும் ‘ஏய் டிரைவர்’ என்று கூப்பிடமாட்டார்கள். சம்பளம் குறைவுதான். அதனால் பரவாயில்லை. நிறைய நேரம் மீதமிருக்கிறது. முடிந்தால் மாலைக் கல்லூரிகளில் அல்லது கரஸ்பாண்டென்ஸ் கோர்ஸில் சேர்ந்து எம்.ஏ. படிக்கலாம். எம்.ஏ. முடித்துவிட்டால் வேலை நிச்சயம் கிடைக்கும். அப்புறம் டிரைவர் வேலை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்று எண்ணினான் கண்ணப்பன். எல்லாம் நினைக்கச் சுகமாயிருந்தது.

உடம்பிலேயே டிரைவர் என்றும் அடிமை என்றும் போர்டு எழுதித் தொங்க விட்டுக் கொண்ட மாதிரி ‘ஸ்வஸ்திக் ஸ்டீல்ஸ்’ என்று காக்கி உடுப்பில் தோள் பட்டையில் எம்பிராய்டரி செய்த யூனிஃபாரத்தை நாளை முதல் அவன் சுமக்க வேண்டியதில்லை. அந்தக் காக்கி உடையில் 'டிரைவர்' என்று வேறு சிவப்பு நூலில் எழுத்துக்கள் இருந்தன.

அவனை மிக மிகக் கூசச் செய்த விஷயம் இதுதான். மாலை சீக்கிரமே வேலை முடிந்து அவன் பட்டிமன்றம், கவியரங்கம் எதற்காவது போக வேண்டுமானாலும் அந்தக் காக்கி உடைகளை மாற்றாமல் போக முடியாது. காக்கி உடைகளைத் தவிர்த்து அவன் இஷ்டம் போல் உடுத்திக் கொள்ள முயன்றதைக் குப்புசாமி தடுத்தார். இனிமேல் சேட்டிடம் அந்த அவஸ்தை எல்லாம் கிடையாது. டீ ஷர்ட், ஸ்போர்ட்ஸ் பனியன், வேஷ்டி ஜிப்பா என்று அவன் எதை அணிந்தாலும் அவர் மறுக்கமாட்டார். சுதந்திர மாயிருக்கலாம்; சுதந்திரமாகப் பழகலாம். மாலை 5 மணிக்கு மேல் கடற்கரையிலிருந்து திரும்பியதும் எங்கு வேண்டுமானாலும் போகலாம். அவன் ஸ்வஸ்திக் ஸ்டீல்ஸி லிருந்து விலகிச் சேட்டிடம் வேலைக்குச் சேர்ந்த பின் நிறைய இலக்கியக் கூட்டங்களுக்குப் பேசப் போக முடிந்தது. நிறையப் பட்டிமன்றங்களில் பேசவும், கவியரங்கங்களில் பாடவும் முடிந்தது. கை தட்டலும் கொஞ்சம் பணமும்கூடக் கிடைத்தன.

‘அடிமைத்தனங்களில் மிக மிக மோசமானது கருத்தடிமைப் படுதலா, செயலடிமைப்படுதலா?’ - என்ற தலைப்பிலான ஒரு பட்டிமன்றத்தில் செயலடிமைப் படுதலே மோசமானது என்னும் கட்சித் தலைமையை ஏற்று அவன் விவாதிக்கும் போது,

‘தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்

தொண்டு நிலைமையைத் தூ என்று தள்ளி’