பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/592

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1214

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்


சேர்மன் ஃபோனை வைத்தார். பின்பு அவர்கள் கொடுத்த கூட்டு ராஜிநாமாக் கடிதத்தையும், ஷோகாஸ் நோட்டீஸையும் அவர்கள் இருவர் முன்னிலையிலுமே கிழித்துக் குப்பைக் கூடையில் போட்டுச் சொன்னார்.

“இந்த ராஜிநாமாவை நான் ஏத்துக்கலே ரவி! உன்னையும், மல்லிகாவையும் இந்த இன்ஸ்டிடியூஷன் இழக்கத் தயாராயில்லே. தயவுசெய்து இந்த வயசானவனின் வார்த்தைக்கு மரியாதை குடுங்க, போய் நீங்க ரெண்டு பேரும் யாராவது ஒருத்தரோட ஸீட்லே சேர்ந்தாப்ல இருங்க. ப்ளீஸ்…”

அவர்கள் இருவருக்கும் அவர் ஏன் அப்படி வேண்டுகிறார் என்று புரியா விட்டாலும், அதை மறுக்கத் தோன்றவில்லை. இருவரும் திரும்பி வந்து ரவீந்திரனின் ஸீட்டில் எதிரும் புதிருமாக அமர்ந்தனர், காத்திருந்தனர்.

பத்து நிமிஷத்தில் எம்.டி. புறப்பட்டுச் சேர்மன் அறைக்குள் செல்வதை, இருந்த இடத்திலிருந்தே ரவீந்திரனும், மல்லிகாவும் காண முடிந்தது.

மாலை மணி நான்கு நாலரை, ஐந்து. என்று நேரம் வளர்ந்தது. ஆபீஸ் நேரம் முடிந்து எல்லோரும் வீட்டுக்குப் போயாயிற்று. ரவீந்திரனும், மல்லிகாவும் மட்டும் தனியாகக் கொட்டக் கொட்ட உட்கார்ந்திருந்தனர். சேர்மன் அறைக்குள் போன எம்.டி. இன்னும் திரும்பவில்லை.

மாலை ஐந்தே கால் மணிக்குச் சேர்மனின் அறை கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார் எம்.டி. நேரே அம்பு போல அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த இடத்துக்கு வந்து, “ஐயாம் சாரி! நீங்க ரெண்டு பேரும் பெரிய மனசு பண்ணி, என்னை மன்னிக்கணும். இங்கேயே கன்டின்யூ பண்ணணும்” என்றார். பிறகு தன் அறைக்குச் சென்றார்.

வீடு திரும்ப லிஃப்டில் கீழே இறங்கிக் கொண்டிருந்த போது, “நம்ப சேர்மனோட பெரிய அஸெட் என்ன தெரியுமா?” என்று மல்லிகாவைக் கேட்டான் ரவீந்திரன். மல்லிகா ஒன்றும் புரியாமல் விழித்தாள்.

“நானே சொல்லிடட்டுமா?”

“சொல்லுங்களேன்…”

“அவரோட இந்த இங்கிதம்தான் அவர்கிட்ட இருக்கிற மிகப் பெரிய சொத்து.”

“சரி! அஸெட் என்னன்னு சொல்லியாச்சு. லயபிலிட்டி எதுன்னும் நீங்களே சொல்லிடுங்க.”

“அது உனக்கே தெரியும். லயபிலிட்டிதான் சற்று முன் நம்மிடம் தேடி வந்து, மன்னிப்புக் கேட்டுக் கொண்டதே!”

இதைக் கேட்டுமல்லிகா சிரித்தாள்.

(அமுதசுரபி, ஜனவரி, 1987)