பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/593

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

169. ‘கேபினட் டெசிஷன்ஸ்’[1]

லைமை செயலாளர் தண்டல் நாயகம் இ.ஆ.ப. கை கட்டி, வாய் பொத்தி, மெய் குழைந்து, முதுகு வணங்கி முதல்வர் முகஸ்துதிப் பிரியர் - மன்னிக்கவும் - டாக்டர் - தரணி காவலர் - முதல்வர் முகஸ்துதிப் பிரியரிடம் மறுபடியும் வினாவினார். பவ்யமாகத் தணிந்த குரலில்தான் வினாவினார்: “வெள்ளிக்கிழமை காலை பத்து மணிக்குக் கேபினட் மீட்டிங் போடச் சொல்றீங்களே? அன்னிக்கு நீங்க மெளன விரதமாச்சே? எப்படி முடியும்?”

“அன்னிக்கே போட்டுடுங்க! பரவாயில்லே. நான் சமாளிச்சுப்பேன். நம்ம அமைச்சருங்க நான் ஜாடையில் சொன்னாலே புரிஞ்சுப்பாங்க. மீட்டிங் போட்டு ரொம்ப நாளாச்சி. கேபினட் அமைச்சருங்க யாருன்னு எனக்கே முகம் மறந்து கூடப் போச்சு. சந்திச்சு அத்தனை நாளாகுது.”

“மீட்டிங் முடிச்சப்புறம் பிரஸ்ஸுக்கு யார் ப்ரீஃப் பண்ணுவாங்க? சீஃப் செகரெட்டிரிங்கிற முறையிலே பாலிஸி மேட்டர்ஸ், கவர்மெண்ட் டெஸிஷன்ஸ், ஆக்ஷன் இது பற்றித்தான் நான் ப்ரீஃப் பண்ணலாம். உங்க உள் கட்சி விவகாரம் “புது மந்திரிகள் உண்டா? பதவி விலகல் இருக்குமா? புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படுமா?”ங்கிற மாதிரிக் கேள்விக்கெல்லாம் எப்படி யார் பதில் சொல்வாங்க? நான் அதெல்லாம் சொல்றது நல்லாயிருக்காதே?”

“கேபினட்ல நம்பர் டூ யாரு? படு ஞாயிறு பம்மல் - பாவளவனார்தானே? அவர் பிரஸ்ஸுக்கு ஃப்ரீப் பண்ணிப்பாரு. என் ஜாடைக் குறிப்புக்கள் அவருக்குப் புரியும். சந்தேகம் வர்ர மாதிரி விவகாரங்களை நான் ஒரு துண்டுத்தாளிலே எழுதியே அவரிட்டக் காமிச்சிடுவேன்.”

“சரிங்க! அப்போ வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்குக் கேபினட் மீட்டிங் மாண்புமிகு - முதல்வர் தலைமையில் நடக்கும்னு அமைச்சருங்களுக்கு விவரம் அனுப்பிடறேங்க.”

“செஞ்சுடுங்க.”

தண்டல் நாயகம் உடனே டாக்டர்-முதல்வரின் அறையிலிருந்து தம் அறைக்குத் திரும்பிக் காபினட் மீட்டிங் பற்றிய சுற்றறிக்கையை அனுப்ப ஆயத்தம் செய்தார்.

சட்டப்படி முதல்வர் மெளன விரதம் என்பதை சர்க்குலரில் டைப் செய்ய முடியாதாகையினால், ஒவ்வோர் அமைச்சராக ஃபோன் செய்து கூறினார்.


  1. இது, கடல் கொண்ட லெமூரியாவில் இருந்த ஒரு தமிழ் மந்திரி சபை பற்றிய கற்பனை.