பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/602

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1224

நா. பார்த்தசாரதி சிறுகதைகள்

தள்ளாடும் பல்கலைக்கழகத் தலைவர் பதவி கலம்பகச் செல்வருக்கு – ‘எலிகளை ஒழிக்கப் புது வாரியம்’ ‘கசப்பை ஒழிக்க இனிப்பு வாரியம்’ என்று தலைப்புக்கள் தடபுடல் பட்டன. கவர்னர் பத்திரிகைகளைப் படித்து விட்டு அதிர்ச்சியடைந்தார். ‘மத்திய அரசுக்கு ரிப்போர்ட் பறந்தது. எந்த வாரியம் வேண்டுமானால் வைக்கட்டும் - நமக்குச் சலாம் போடுகிறவரை சும்மா இருப்போம்’ என நடுவண் அரசு கண்டு கொள்ளவில்லை. பேசாமல் சிரித்து விட்டுச் சும்மா இருந்து விட்டனர்.

மறுநாள் சனிக்கிழமை முதல்வர் தரணி காவலர் மாண்புமிகு டாக்டரின் மெளன விரதம் முடிந்ததும், சில நிருபர்கள் அவரது கிருஷ்ணாவரம் தோட்டத்திற்குச் சென்று அவரை அரும்பாடுபட்டு முயன்று சந்தித்தனர். காலை எட்டு மணிக்கு அங்கே போன நிருபர்கள் மாலை இரண்டரை மணி வரை காத்திருந்து இரண்டே முக்கால் மணிக்கு மாண்புமிகு தரணி காவலரைச் சந்தித்தனர்.

‘கிஸ்கோ-காந்தி’ என்கிற பாவாடை தாவாணி அணிந்த பருவத்துக் கவர்ச்சிக் குழந்தையுடன் தீவிரமாகக் கேரம் போர்டு விளையாடிக் கொண்டிருந்த தரணி காவலர் அவசரமாக அதை ஒத்தி வைத்து விட்டு வந்து, நிருபர்களைச் சந்தித்தார்.

“கேபினட் டெசிஷன்ஸ் எல்லாம் ரொம்ப டிராஸ்டிக்காக இருக்கே/..?”

“கேபினட்டா? அப்பிடி மீட்டிங் எதுவுமே நடக்கலீங்களே?”

நிருபர்கள் ஒரேயடியாக ‘ஷாக்’ அடைந்து,

“அமைச்சர் படுஞாயிறு பாவளவனார்…”

“அதெல்லாம் பெரிசா ஒண்ணும் பொருட்படுத்தாதீங்க. கொஞ்ச நாளா அவரு ‘மெண்டல்’ ஆயிட்டாரு.”

“அப்பிடியே போட்டுக்கலாங்களா?”

“முதல்வர் வருத்தம்னும் சேர்த்துப் போட்டுக்குங்க. விரைவில் படு ஞாயிறு மூளைச் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்கப்படுவார். முதல்வர் அதற்கான ஏற்பாடுகளில் முனைந்துள்ளார்னும் போட்டுக்குங்க.”

அடுத்தடுத்து இரண்டு மாலை வேளைகளில் ‘ப்ளாஷ்’ கிடைத்ததில் நிருபர்களுக்கு ஒரே குஷி,

“அதிர்ச்சி தரும் செய்தி. கேபினட் கூட்டமே நடக்கவில்லை. முதல்வர் தகவல். அமைச்சர் படுஞாயிறு மூளைச் சிகிச்சைக்காக அரசு செலவில் அமெரிக்கா செல்கிறார்” என்று மாலைத் தினசரிகள் தடபுடல் பட்டன. ஒரே ஒரு நிருபர் மட்டும் இதுபற்றிப் படுஞாயிறுவின் ரியாக்‌ஷன் என்ன என்று அறிவதற்காக அவருக்கு ஃபோன் செய்தார். முதல்வர் கூறிய கேபினட் கூட்டமே நடக்கவில்லை என்பது பற்றி அவரது ரியாக்‌ஷனைக் கேட்டார்.

“டாக்டர் முதல்வர் மாண்புமிகு தரணி காவலர் எது புகன்றாலும், அதுதான் உண்மையாக இருக்கும் என்பதைப் பணிவுடனும், பவ்யத்துடனும், கண்ணியத்துடனும்,