1248
நா. பார்த்தசாரதி சிறுகதைகள்
உறையிலிருந்தவற்றைத் தனித் தனியே பிரித்து அதில் ஒவ்வொன்றாகப் போட்டான். கடைசியாக உறையையும் போட்டான்.
“திருப்திதானே கெளரி?”
“இல்லை! நீங்கள் அவற்றைப் படித்திருக்க வேண்டும். அப்போதுதான் வீண் சந்தேகங்கள் தவிர்க்கப்படும். இந்தக் கடிதங்கள் என் கையெழுத்துத் திருந்துவதற்காக என்று அவனாலேயே எனக்கு டிக்டேட் செய்யப்பட்டவை.”
“குப்பைகளை நான் படிப்பதில்லை”
“என் மேல் உங்களுக்குக் கோபமா?”
“கோபமில்லை! ஆனால் வருத்தம் உண்டு!”
“என்ன வருத்தம், குமார்?”
“அல்ப காரணங்களுக்காக எல்லாம் நான் வீணாகச் சந்தேகப்படுவேன் என்று நீ என்னைப் பற்றித் தவறாக அனுமானம் செய்திருந்தாயே, அதற்காகத்தான் வருத்தம்”
“மன்னித்து விடுங்கள் குமார்!”
“தவறு உன்னுடையதில்லை. சராசரி மனிதர்கள் பெரும்பாலும் சந்தேகங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள், தெய்வமாகிய ஸ்ரீராமனே மனிதர்களுக்கே உரிய கொச்சையான சந்தேகத்துடன் சீதா தேவியைத் தீக்குளிக்கச் சொல்லி இருக்கிறான்! இராமாயணம் சொல்லுகிறது. அரசரான ஸ்ரீராமன் அவதூறுகளுக்காகச் சீதையைத் தீக்குளிக்க வைத்துச் சிரமப் படுத்தியிருக்கிறான். நான் அந்த அவதூறுகளையே தீக்குளிக்க வைத்து விட்டேன் கெளரி!”
“நீங்கள் அந்தக் கடிதங்களைப் படிக்காமல் நெருப்பில் போட்டிருக்கக் கூடாது குமார்!”
“வீண் சந்தேகங்களால் என் மனத்தினாலேயே என்னைச் சுற்றி ஒரு நரகம் படைக்கப்படுவதை நான் வெறுக்கிறேன் கெளரி.”
அப்போது எதிரே இருந்த தீ மூட்டத்தில் மேலும் ஒரு கூடை சருகுகளைத் தோட்டக்காரன் கொண்டு வந்து கொட்டினான்.
“கெளரி! இதை நன்றாகப் பார்த்துக் கொள்! குப்பைகளை அவை எங்கிருந்தாலும் எரித்து விட வேண்டும். உடனே எரித்து விடவேண்டும்” - என்று அவளருகே வந்து கைகோத்துக் கொண்டு உற்சாகமாக நடந்தான் குமார்.
“நீங்கள் ஸ்ரீராமனைக் காட்டிலும் சிரேஷ்டமானவர்”-கெளரி அவன் காதருகே கிளுகிளுத்தாள்.
“அபசாரம்! நாம் மனிதர்கள்!” - என்றான் குமார். பக்கத்தில் வந்த பூக்காரி ஒருத்தியிடம் அப்போது கெளரிக்காகச் சண்பகப்பூ வாங்கினான் குமார்.