பக்கம்:நித்திலவல்லி.pdf/127

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126

நித்திலவல்லி / முதல் பாகம்


நமக்குள் பொறுத்துக் கொள்வதும் விட்டுக் கொடுப்பதும் இயல்புதான்.”

பலவகையிலும் சோதனை செய்து பார்த்ததில் அழகன் பெருமாளின் உறுதியும், பொன்னான இதயமும் இளைய நம்பிக்குத் தெளிவாகத் தெரிந்தன. கோ நகருக்குள் நுழைந்ததும் சந்தித்த முதல் நண்பனாகிய யானைப் பாகன் அந்துவன், எதையும் சிரிப்பு நீங்காத முகத்தோடு பார்க்கிறவன். இரண்டாவதாகச் சந்தித்த இந்த அழகன் பெருமாளோ, எதையும் சிந்தனையோடும், காரிய நோக்கத்தோடும் பார்க்கிறவனாகத் தெரிந்தான். இருவருமே பெரியவரின் ஊழியத்திலும், பாண்டிய நாட்டைக் களப்பிரர் ஆட்சியிலிருந்து விடுவிக்கும் பணியிலும் கடமை உணர்வு குன்றாதவர்களாக இருப்பதை இளையநம்பியால் புரிந்து கொள்ள முடிந்தது. குணங்களால் வேறுபட்ட பலரை உணர்வினால் ஒன்றுபடச் செய்து பணியாற்ற வைத்திருந்த பெரியவரின் கட்டுப்பாட்டையும் ஏற்பாட்டையும் வியந்தான் அவன்.

மாலை நேரம் வரை அந்தக் கணிகை மாளிகைகளிலேயே கழிந்தது. அகிற்புகை மணமும், பூக்கள், சந்தனம், பச்சைக் கற்பூரம் எல்லாம் கலந்த வாசனைகளும் நிறைந்த அந்த மாளிகையில் பெண்கள் அந்தி விளக்குகளை ஏற்றினார்கள். மங்கல வாத்தியங்கள் இசைத்தன. வீடு இந்திரலோகத்து நடன மண்டபம்போல் அழகு மயமாயிற்று. இளையநம்பியும் அழகன் பெருமாளும் இரவில் அங்கேயே உண்ண வேண்டும் என்று அந்த மாளிகையைச் சேர்ந்த பெண்கள் வந்து வேண்டிக் கொண்டார்கள். அவர்களுடைய விநயமும் பணிவான இனிய சொற்களும் உபசாரமும் இளையநம்பியைத் திகைப்படையச் செய்தன. இந்த மாளிகையில் இவ்வளவு அன்பையும் பண்பையும் அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவர்கள் உபசாரமோ அவனை வியப்பிலேயே ஆழ்த்தியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/127&oldid=715338" இலிருந்து மீள்விக்கப்பட்டது