260
நித்திலவல்லி / இரண்டாம் பாகம்
நேரே பூத பயங்கரப் படை வீரர்களோடு, நாளை பொழுது புலர்வதற்கு முன் கொலைக் களத்துக்குப் போவதுதான் இனி உங்கள் விதி.”
“என் தலை விதியை மாற்றுவதற்காக மட்டும்தான், ஆண்டவன் உன்னைப் படைத்திருப்பதாக நீ நினைக்கிறாய் போலும்.”
அவள் மறுமொழி கூறவில்லை. நடைப் பிணம் போல் அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே, தளர்நடை நடந்து பயத்தோடு, அந்தக் கூடத்திலிருந்து அவள் வெளியேறிச் செல்வதை அவன் பார்த்துக் கொண்டிருந்த போதே, இன்னொரு வாயில் வழியாகப் பூத பயங்கரப் படை வீரர்களின் கூட்டம் ஒன்று திமுதிமுவென்று உள்ளே நுழைந்து, மீண்டும் அவனுடைய கைகளையும் கால்களையும் சங்கிலியால் பிணைக்கத் தொடங்கியது.
மந்திராலோசனைக் குழுவினர் பேசி முடித்த பின் வடக்கே களப்பிர தேசத்திலிருந்து வந்திருந்த நாலைந்து பாலிமொழிக் கவிகள் அரசனைக் கண்டு பரிசில் பெறக் காத்திருந்தார்கள். களப்பிரர் ஆட்சியில் அடிமைப் பட்ட பின், அரசவையில் பாலி மொழிக் கவிஞர்களுக்கும், புலவர்களுக்கும் இருந்த செல்வாக்கு, தமிழ்க் கவிஞர்களுக்கும், தமிழ்ப் புலவர்களுக்கும் இல்லாமற் போயிருந்தது. புலவர்கள், பரம்பரையாகச் சந்திக்கவும் நூல்களை அரங்கேற்றவும் இருந்த தமிழ்ச் சங்கத்தின் புகழ் பெற்ற கட்டிடங்களை யானைகள் கட்டுமிடமாகவும், குதிரைகள் கட்டுமிடமாகவும் பயன்படுத்தத் தொட்ங்கி யிருந்தார்கள் களப்பிரர்கள்.