பக்கம்:நித்திலவல்லி.pdf/285

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

286

நித்திலவல்லி / இரண்டாம் பாகம்



“தங்கள் ஆணை என் கடமை!”

“தென்னவன் மாறனைச் சிறை மீட்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, இளையநம்பியை ஆபத்தின்றிப் பாதுகாக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியமான மற்றோர் ஆணையை உன்னிடம் நான் இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறேன்.”

“புரிகிறது! அந்த ஆணையை எல்லா வகையிலும் இந்த அடிமை நிறைவேற்ற முடியும் என்று தாங்கள் உறுதியாக நம்பலாம் ஐயா!”

அவர் அவனை இன்னும் சிறிது நெருக்கமாக அருகே அழைத்துக் கூறலானார்:-

“இளையநம்பி என்னைத் தேடி வந்தது போல் இன்று பிற்பகலில், தெற்கே கொற்கையிலிருந்து ஒர் இளைஞன் திருமோகூருக்கு என்னைக் காண வருவான். விளக்கு வைக்கும் நேரத்துக்குத் திருமோகூர் கொற்றவைக் கோவிலின் வாயிலிலுள்ள வன்னி மரத்தடியில் அவன் வந்து நிற்பான். அவனிடம் நீ நம்முடைய வழக்கமான நல்லடையாளச் சொல்லைக் கூறினால், அவனுக்கு அது புரியாது. ‘பெருஞ்சித்திரன்’ என நீ அவனிடம் குரல் கொடுத்தால், அவன் தன் வலது கையில் ஒன்பது ஒளி நிறைந்த முத்துகளை எண்ணி எடுத்து வைத்து, உன்னிடம் நீட்டுவான். அதுதான் அவனை நீ இனம் காணும் அடையாளம். உடனே நீ அவனை ஊருக்குள் அழைத்துச் செல்லாமல், ஊர்ப்புற வழியாக ஒதுக்கி, இரவோடு இரவாக இங்கே கூட்டிக் கொண்டு வந்து விட வேண்டும். மலையடிவாரத்தில் சிலம்பாற்றங்கரைக்கு வந்து நின்றால் போதும். அங்கே நம் ஆபத்துதவிகள் உங்களை என்னிடம் அழைத்துவரக் காத்திருப்பார்கள்.”

உடனே தலை வணங்கி, அந்தப் பணியை ஏற்றுக் கொண்டு, திருமோகூர் திரும்புவதற்காக விரைந்தான் கொல்லன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/285&oldid=946407" இலிருந்து மீள்விக்கப்பட்டது