பக்கம்:நித்திலவல்லி.pdf/405

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

407


மாலையை நோக்கி, “உன்னை ஆடல் பாடல்களில் வல்லவள் என்பதை விட, ஓர் அரச தந்திர மேதை என்றே சொல்லலாம் போலிருக்கிறதே இரத்தினமாலை! நீ என் வியப்புகளை ஒவ்வொன்றாக வளரச் செய்கிறாய்” என்றான்.

“எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளுங்கள். ஆனால், நீங்கள் வியக்கின்ற வியப்புகளும், சொல்லுகின்ற புகழ் வார்த்தைகளும் என்னைச் சேர வேண்டியவை அல்ல. அவை பெரியவர் மதுராபதி வித்தகரைச் சேர வேண்டியவை. இந்தக் காரியங்களை எல்லாம் அவரே திட்டமிடுகிறார். அவரே மூலமாக இருந்து இயக்குகிறார் என்பது உங்களுக்குத் தெரிந்ததுதான்” என்று இரத்தினமாலை மிகவும் தன்னடக்கமாக மறுமொழி கூறினாள்.

அங்கே உள்ளே படியிறங்கிப் பார்த்ததும் நிலவறையின் இரு முனைகளிலும் கண்ணுக்கு எட்டிய தொலைவுவரை பாண்டிய வீரர்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். அங்கங்கே சொருகியிருந்த தீப்பந்தங்கள் நிலவறையில் மண்டிக் கிடந்த இருளைப் போக்கியிருந்தன. படியிறங்குகிற இடத்தில் திருமோகூர்க் கொல்லன் இளையநம்பியை வணங்கி வரவேற்றான்.

“எல்லாம் நல்ல ஏற்பாடுதான் இரத்தினமாலை! ஆனால் ஒரே ஒரு சந்தேகம். தந்திரமாக வீரர்களையும் ஆயுதங்களையும் கோநகருக்குள் வரவழைத்து விட்டோம். உபவனத்திலும், அகநகரில் வெள்ளியம்பல மன்றத்தின் தோட்டத்திலுமாக இரு வேறு முனைகளில், இந்த நிலவறைக்குள்ளே இறங்கி வர வழிகள் இருக்கின்றன. எதிர்பாராதவிதமாகக் களப்பிரர்களின் படைகள் இன்றோ, நாளையோ இந்த இரு முனைகளையும் கண்டு பிடித்து உள்ளே இறங்கி இரண்டு பக்கங்களிலிருந்துமே நம்மை வளைத்துத் தாக்குமானால் நாம் என்ன செய்யமுடியும்?” என்று வினவினான் இளையநம்பி. அவனுடைய இந்த வினாவிற்கு ஒரே சமயத்தில் ஒரே விதமான மறுமொழியை இரண்டு குரல்கள் கூறின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/405&oldid=946623" இலிருந்து மீள்விக்கப்பட்டது