பக்கம்:நித்திலவல்லி.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

நித்திலவல்லி / முதல் பாகம்


நம்பியை யானைக் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றான். போகும் போதும் அதே உற்சாகமான பேச்சுத்தான்.

“ஐயா! நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்நகரத்தில் முதல்முதலாக என் முகத்தில் விழிப்பவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுடைய காரியத்துக்கு நிச்சயமாக வெற்றி உண்டு. இன்று இந்த நகரத்தில் நுழைந்தவுடன் நீங்கள் முதலில் என் முகத்தில்தான் விழித்திருக்கிறீர்கள். இனி நீங்கள் எதற்குமே கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடைய முகத்துக்கு அப்படி ஒர் இராசி உண்டு என்பது பிரசித்தமானது...”

“நீ சொல்வதை நான் எப்படி நம்புவது அப்பனே? உன்னுடைய முகராசியின் வெற்றிக்கு நிரூபணமோ எடுத்துக் காட்டோ இருந்தால்தானே நம்பலாம்?”

“நிரூபணம் வேண்டுமானால் மிகவும் பெரிய இடத்திலிருந்தே அதை எடுத்துக் காட்டலாம் ஐயா. அதிக தூரம் போவானேன்? நம் இருந்த வளமுடைய பெருமாளையே எடுத்துக் கொள்ளுங்களேன். நாள் தவறாமல் விசுவரூப மங்கல தரிசனத்தின் போது வையையிலிருந்து குடம் நிறைய என் யானைமேல் தான் திருமஞ்சன நீர் வருகிறது. அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகராகிய அவரே எண்ணற்ற மக்களுக்கு அருள்புரிவதற்கும் காட்சியளிப்பதற்கும் முன் இந்த ஏழை யானைப் பாகன் அந்துவனின் இராசியான முகத்தில்தான் நாள் தவறாமல் முதலில் விழிக்க வேண்டியிருக்கிறது.”

இதைக் கேட்டுச் சிரிப்பை அடக்கமுடியாமல் இளைய நம்பி நன்றாக வாய்விட்டுச் சிரித்து விட்டான்.

“இரைந்து சிரிக்காதீர்கள்! நம்மைச் சுற்றிலும் அபாயங்கள் இருக்கின்றன. இந்தப் பாண்டிய நாட்டில் அதிக மகிழ்ச்சியோடு இருப்பவர்கள் யார் யாரோ அவர்களெல்லாரும் கூடக் களப்பிரர்களின் சந்தேகத்துக்குரியவர்களே” என்று கூறிய்படியே எதிரே கையைச் சுட்டிக் காட்டினான் அந்துவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/57&oldid=715216" இலிருந்து மீள்விக்கப்பட்டது