பக்கம்:நித்திலவல்லி.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

நித்திலவல்லி / முதல் பாகம்



ஓடங்களில் அக்கரையில் செல்லூருக்கும், பிற பகுதிகளுக்கும் செல்வோர் சென்று கொண்டிருந்தனர்.

கரையோரங்களில் இருந்த புன்னை, பாதிரி, நாகலிங்க மரங்களின் பூக்கள் உதிர்ந்து உதிர்ந்து, வையையின் கரையை ஒட்டிய நீர்ப்பரப்புச் சிறிது தொலைவுக்குப் பூக்களாலேயே மூடப்பட்டுப் பூம்பரப்பாகத் தோன்றியது. நெடுநேரம் வெளவால் நாற்றமும் நிலவறையின் புழுக்கமும் படர இருளில் நடந்து வந்திருந்த இளையநம்பிக்கு, உப வனத்தின் பசுமை மணமும், பல்வேறு மலர்களின் கதம்பமான வாசனைகளும், சில்லென்று மேனியையும், கண்களையும் வந்து தழுவும் குளிர்ச்சியும், சொல்லால் சொல்லி விளக்க முடியாத சுகத்தை அளித்தன.

உப வனத்தின் புல்வெளியில் இளம் புள்ளி மான்கள் மேய்ந்து கொண்டிருந்தன. பூமியில் வந்து நெருக்கமாகச் சிதறிய நட்சத்திரங்களைப் போல் வெகு தொலைவு பசும் பரப்பாகப் பரந்திருந்த மல்லிகைச் செடிகளில் பூக்கள் அடர்த்தியாகப் பூத்திருந்தன. மனோரஞ்சிதப் புதர்களில் எங்கெங்கோ இடம் தெரியாமல் பூத்திருந்த பூ மடல்களின் நறுமணம், தேவலோகத்தின் படிகளில் நடந்து போவது போல், அவனுடைய நடையையே கம்பீரமாகவும், உல்லாசமாகவும் மேலே ஊக்கியது. பூக்களின் மிக, மிக நுண்ணிய நறுமணத்திற்கும், இசையின் பேரினிமைக்கும், மனிதனின் நரம்புகளில் முறுக்கேற்றி, அவன் எங்கோ பெயர் புரியாத மண்டலங்களின் வீதிகளில் மிதப்பது போன்ற களிப்பை அளிக்கும் ஆற்றல் இருப்பதை, இளையநம்பி பலமுறை உணர்ந்திருக்கிறான். இன்று, இப்போதும் அதே உணர்வை இங்கே அடைந்தான் அவன்.

எதிரே தரையை ஒட்டித் தாழ்வாகச் சாய்ந்திருந்த ஒரு சுரபுன்னை மரத்தின் கிளைகளில், நாலைந்து மயில்கள் அமர்ந்திருந்தன. அவற்றில் ஒரு மயில் குதூகலமாகத் தோகை விரித்தாடிக் கொண்டிருந்தது. மாமரங்களில் குரங்குகள் கிளைக்குக் கிளை தாவிக் கொண்டிருந்தன. கிளிகளும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நித்திலவல்லி.pdf/89&oldid=945352" இலிருந்து மீள்விக்கப்பட்டது