500 நினைவு அலைகள் கணிசமான தொகை - கட்டுவதாக உறுதிமொழி தேவைப்பட்டது. அதையும் திரு நாயகம் கொடுத்துவிட்டார். அதை திரு. குருசாமிக்குக் கோடிட்டுக் காட்டி, 'அப்பெரியவர் இவ்வளவு வெள்ளை உள்ளம் கொண்டவராக இருக்கிறாரே என்ற வியப்பை வெளிப்படுத்தினேன். 'ஆம்; உதவி செய்ய முன்வருவதில் தொல்லை தொக்கிநிற்பது அவருக்குத் தெரியும். அவர் உடையைப் பார்த்திருப்பீர்கள். அத்தனையும் வெள்ளை; வெள்ளை வேட்டி; வெள்ளைக் கோட்டு: வெள்ளைத் தலைப்பாகை. திரு நாயகம் புறத்திலும் தூயவர். அகத்திலும் தூயவர். 'இனம் இனத்தோடே, என்று சொல்லுவதுண்டு. இவர் வெள்ளுடை வேந்தர் என்று போற்றப்பட்ட நீதிக்கட்சித் தலைவர் சர் பிட்டி. தியாகராயரின் தோழர். அவரோடு சேர்ந்து, நீதிக்கட்சியை நிறுவத் துணைநின்றவர். நீதிக்கட்சியின் செயலாளராக இருந்தவர்...' இப்படிச் சொல்லிக்கொண்டு வருகையில் நான் குறுக்கிட்டேன். 'திரு நாயகத்தை, கூட்டுறவுத் துறையின் ஒய்வுபெற்ற துணைப் பதிவாளர் என்று மட்டுமே நாங்கள் அறிவோம். அதற்கு முந்திய அவருடைய அரசியல் தொண்டைப் பலர் அறியமாட்டார்களே' என்று கூறினேன். 'ஆம்; அவர் விளம்பரத்தை விரும்பாதவர். மேலும் சமுதாய ஏணியின் மேல் படிக்கட்டுகளைச் சேர்ந்த சாதி வேற்றுமைகளை மறந்தவர். "தமது சைவப்பிள்ளைகளைப் பற்றிக் கவலைப்படுவதைக் காட்டிலும் ஆதி திராவிடர்களின் முன்னேற்றம் பற்றி அதிகம் சிந்திப்பவர். 'எனவே, அவருடைய உறவினர்களுக்குப் பற்றுக் குறைவு. கீழ்மட்டத்தில் உள்ள மக்கள் தங்களுக்காகப் பாடுபடுவோரைப் போதிய அளவு போற்றிப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாதவர்கள்' என்று விளக்கினார். செ.தெ. நாயகம் திரு செ.தெ. நாயகத்தின் முழுப் பெயர் என்ன? அவர் எங்கே பிறந்தார்? செட்டிகுளம் தெய்வநாயகம் என்பதாகும். 'திக்கெலாம் புகழும் திருநெல்வேலிச் சீமை 'யைச் சேர்ந்த குலசேகரன்பட்டினத்திற்கு அருகில் உள்ள செட்டிகுளத்தில் பிறந்தார். எப்போது பிறந்தார்?
பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/543
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை