71 O நினைவு அலைகள் அப்படிப்பட்டவர், காசி யாத்திரை சென்றார்; கங்கை நீரில் மூழ்கினார்; புனித நகர்களைக் கண்டார்; இவற்றை நண்பர்கள் விவரித்தபோது, என் சிந்தனை வேலை செய்தது. 'வயது முதிர்ச்சியைப் பாராது நீண்ட காசிப் பயணத்தை திரு. உமாமகேசுவரம்பிள்ளை மேற்கொள்வானேன்! 'வழி வழி வந்த சைவ சமயத்தின் பழமைப் பிடிப்பு அல்லவா? 'ஆழ்ந்த, பழமை மாறாத, சமய நம்பிக்கையாளராகிய பிள்ளை அவர்கள், சுயமரியாதை இயக்க மாநாடுகளில் கலந்து கொண்டது பொருள் ஆதாயத்திற்கா? புகழ் விரும்பியா? பதவியை நாடியா? இல்லை. 'அம் மாநாடுகளுக்குச் செல்லாதிருந்தால், மேற்கூறிய அனைத்துமே அவருக்குக் குவிந்திருக்கும். அது தெரியாத அப்பாவியல்ல அவர். 'பின் அவரை உந்தியது ஏது? 'மான உணர்ச்சி; தன்மான உணர்ச்சி; சமுதாய மான உணர்ச்சி; மொழி மான உணர்ச்சி ஆகியவை ஆகும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிறது தமிழ்ப் பண்பாடு. 'பிறவியிலேயே கீழ்த்தரம்; உரிமையற்ற மக்கள்; தொடக்கூடாதவர் கள்; நேரே வழிபடத் தகுதியில்லாதவர்கள். 'நீங்கள் கீழ்ச்சாதியாக இருப்பது போலவே உங்கள் தமிழும் கீழானது; வீட்டுப் பேச்சுக்கு மட்டுமே பொருத்தமானது தமிழ் என்கிறது நடைமுறைச் சமுதாயம். 'தமிழ்ப் பண்பாட்டிற்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் இடையே எழும் முரண்பாடு, மானத்தோடு, பிறர்க்குத் தாழாது வாழத்துடிக்கும் உரிமைத்துடிப்பு ஆகியவை அவரை வேறு தோற்றத்தில் காட்டின. இப்படிச் சிறகடித்துப் பறந்தது, எனது அன்றைய சிந்தனை! பிற்காலத்தில், என் தொடர்புகள் வளர வளர, ஒரு பேருண்மையைப் புரிந்துகொள்ள முடிந்தது. அது என்ன? மாறான தோற்றமளிக்கும் தமிழர்களில் சிலர் அல்ல - பலர் அல்ல - ஏறத்தாழ ஒரு கோடி மக்களாவது கடவுள் நம்பிக்கையாளர்கள். ஆனால் அவர்கள் - இன்றைய சாதி முறையை வெறுக்கிறார்கள். அந்த உளைச் சேற்றில் இருந்து கரையேற முடியாது அல்லல் படுகிறார்கள். பாரதி காட்டிய 'எல்லோரும் ஒர்நிலை என்னும் மட்டத்திற்கு வளர முயல்கிறார்கள். அவர்களைப் பிறவி பற்றி இழிவுபடுத்திக்கொண்டே வருவது சமயத்தின் இன்றியமையாத கூறு என்றால் அவர்கள் நாத்திகர்களாக மாறாவிட்டாலும், பிற சமயத்தவர்களாகி விடுவார்கள்.
பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/751
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை