352 நினைவு அலைகள்
பக்கம் போவோமா?’ என்று கேட்டது எங்கள் காதுகளில் வீழ்ந்தது. அவள் பதில் என்ன?
‘'கண்ணே பேச்சாளர் இவ்வளவு சினங்கொள்வதற்குக் காரணம் இல்லாமற் போகாது. அதைக் கேட்டுவிட்டுப் போவோம் என்பதுதான்.
இளம் பெண் அமைதியாகச் சொன்னதும் எங்களுக்குக் கேட்டது. இருப்பினும் நாங்கள் நழுவி விட்டோம்.
பொது உடைமைப் பேச்சாளர், பெண் உரிமைப் பேச்சாளர் போன்ற சிலருடைய உரைகளைக் கேட்டபின் வந்த வழியே திரும்பினோம்.
ஆப்பிரிக்கர் பேசிக்கொண்டு இருந்த இடத்தின்மேல் கவனத்தைத் திருப்பினோம். அவரே பேசிக்கொண்டிருந்தார்; கூட்டம் பெருகியிருந்தது.
‘செவிகைப்பச் சொல் பொறுக்கும் பண்பை'ப் பார்த்து வியந்தோம்.
ஆங்கிலேயர், சில நூற்றாண்டுகள், பல நாடுகளை ஆண்டவர்களாக இருந்ததற்கும் இப்பண்பும் ஒரு காரணமோ!
ஆங்கிலேயர் பண்பாடு
எங்களை வியப்பில் ஆழ்த்திய மற்றொன்றை இங்கே குறித்தல் பொருத்தம்.
எண்ணற்ற பிரிட்டானியக் குடும்பங்கள், தங்கள் அன்றாடத் தேவைகளுக்கான பால், பழம், தயிர், முட்டை, புலால், மளிகைக் கடைப் பொருள்கள் ஆகியவற்றை வீட்டிலிருந்தபடியே பெற்றுக் கொள்ளுகிறார்கள்.
உரிய கடைகளுக்கு, இன்னின்ன பொருள் இவ்வளவு வேண்டு மென்று தொலைபேசியில் சொல்லி விடுவார்கள்.
கடைக்காரர், அப்பொருள்களை வீட்டிற்கு அனுப்பி வைப்பார்; தரக்குறைவோ, எடை அளவு குறைவோ இருக்காது.
பால், முட்டை போன்றவற்றை விடியற் காலையில் கொண்டு வருவார்கள்.
வீட்டில் இருப்போரை எழுப்பித் தொல்லை கொடுக்க மாட்டார்கள்.