|ெ து சுந்தரவடிவேலு 25
புதிய பயிற்சியாளர்
அவர் இடத்திற்குத் திருச்சி மாவட்டக் கல்வி அலுவலரான திரு. சி. இரகுநாதன் மாற்றப்பட்டார். அவரிடம் மாவட்ட அலுவலர் பயிற்சி பெற்றேன்.
அவர் அய்யங்கார். நான் குறைபட அவர் இடங்கொடுக்க வில்லை. என்னிடம் அன்பும் ஆதரவும் காட்டினார்.
வேலை கற்றுக் கொடுப்பதிலும் ஆர்வத்தோடு இருந்தார். அவருடைய நட்பு பல்லாண்டு காலம் தொடர்ந்தது.
திரு. இரகுநாதன் அலுவல் பற்றி ஈரோடு சென்றார். என்னையும் அழைத்துக்கொண்டு போனார்.
ஈரோட்டிற்குச் செல்லும்போது, பெரியார் ஈ.வெ.ரா. வைக் காண, என் மனைவியையும் அழைத்துச் செல்லலாம் என்று அவரே யோசனை கூறினார்.
அப்படியே காந்தம்மாவை அழைத்துச் சென்றேன். நாங்கள் இருவரும் பெரியார் வீட்டில் தங்கியிருந்தோம் அவரோடு விருந்துண்டோம். உரையாடினோம். மகிழ்ந்தோம்.
மாணவர் இரா. நெடுஞ்செழியன்
அப்போது மாணவர் இரா. நெடுஞ்செழியன் பெரியார் இல்லத்திற்கு வந்து இருந்தார். அவரைப் பெரியார் எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். பெரியாரை நினைக்கும்போது எனக்கு நாவலர் நினைவிற்கு வருவதும், நாவலரை நினைக்கும்போது அவரோடு என்னைத் தொடர்பு படுத்திய பெரியார் நினைவில் மின்னுவதும் அதனால் தான்.
சி. சுப்பிரமணியத்தின் பரிவு
திரு. சி. சுப்பிரமணியன் வீட்டில் அவரது விருந்தாளியாகத் தங்கியிருந்த எனக்குத் தனி வீடு கிடைக்க ஏறத்தாழ இரண்டு திங்கள் ஆயிற்று. -
அவ்வளவு காலம் தேடிய பிறகு, கோவை இரத்தினசபாபதி புரத்தில் வெங்கடசாமி தெருவில் தனி வீடு ஒன்று கிடைத்தது.
அவ் வீடு கிடைத்து, நான் அங்குக் குடியேறுவதற்கு முன்பு, இந்திய வரலாற்றில் இடம் பெற்றுள்ள துடிப்பான போராட்டம் ஒன்று வெடித்தது.
நான் குறிப்பிடுவது எதை?