நிழல் முகங்கள் 155
அவர் முகத்தைப் பார்த்து, "அப், பா." என்று தலையை ஆட்டியதில் அவன் கண்ணிர் சொட்டு நீர்ப்பாசனம்போல் அவர் வயிற்றில் சிதறின. சுந்தரம் அவன் தலையைக் கோதிவிட்டார். கழுத்தைத் தடவி விட்டார். திடீரென்று அந்தப் பயல், அவர் நெஞ்சில், ஆள்காட்டி விரலை அமுக்கி, பிறகு, கையைத் தூக்கி, ஆட்டி ஆட்டி, உடம்புக்கு எப்படி இருக்கிறது என்று கேட்டான். பிறகு அவர்மேல் கோபப்பட்டவன்போல், அவர் வயிற்றில் அடித்தான். பிறகு, மருந்து சாப்பிட்டால் என்ன...? என்று கையை வாயருகே கொண்டு போய்விட்டு, அந்த கையை கேள்விக்குறியாக்கி காட்டினான். இப்போதே டாக்டரிடம் போகவேண்டும் என்பது போல், அவரைப் பிடித்துத் தள்ளினான். அது முடியாமல் போகவே, அவர் கையைப் பிடித்து இழுத்தான்.
உள்ளே, இதனை, உணர்வு மயமாய் பாதித்துக் கொண்டிருந்த அந்தோணியைப் பார்த்து, தான் அன்றைக்கு ரயியில் போகப் போவதில்லை என்பதுபோல் சைகை செய்தான். சுந்தரம், அவனை அணைத்துக் கொண்டார். அவன் கன்னங்களை பிதுக்கியபடியே, "எனக்கு எதுவும் வராது.டா- அப்படி ஏதாவது வாரதாய் இருந்தால், நீ என்கிட்டே வழக்கமாய் வாரது மாதிரி வராமல் போனால்தான் வரும் என்றார். உடனே அந்தப் பயல், இனிமேல் அப்படி நடக்க மாட்டேன் என்பதுபோல் தலையை ஆட்டினான். தான் செய்தது தப்பு என்று வாயில் அடித்துக் கொண்டான். கரங்களைக் காதுகளில் போட்டு தோப்புக்கரணம் போட்டான்.
சுந்தரம், கையில் இருந்த பொட்டலத்தைப் பிரித்தார். நாலு முழம் புது வேட்டியை எடுத்து, அவன் இடுப்பைச் சுற்றிக் கட்டியபடியே, அவன் பழைய வேட்டியை அவிழ்த்தார். அவன் கிழிந்த பனியனைத் தாறுமாறாக கிழித்தபடியே, அந்த கிழிசல்களை எடுத்து, ரயில் தண்டவாள இடைவெளிக்குள் போட்டபடியே, ஒரு "டி" சட்டையை அவன் கழுத்துக்குள் திணித்து வயிறு வரைக்கும் இழுத்துவிட்டார். பைக்குள் ஐந்து ரூபாய் நோட்டைத் திணித்து விட்டார். அந்தோணி சந்தேகமாகக் கேட்டான்.
"ஒங்களுக்குள்ளே எதுவோ நடந்திருக்கு."
“ஏதோ ஒன்று நடந்துட்டுதான். ஆனால் அது எங்க உறவை நகர்த்திடல. ஒனக்குத் தெரியாதா அந்தோணி. ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டு, அதிலிருந்து அவர் மீண்டதாலே தானே பெருமை. எங்களோட உறவும் ஒரு சந்தேகச் சிலுவையில் அறையப்பட்டு, இப்போ தானாவே உயிர்த்தெழுந்துட்டு."
"நல்லா பேசுறிங்க சுந்தரண்ணே."