பக்கம்:நிழல் முகங்கள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திழல் முகங்கள் 23

மேலே அடுத்த வார்த்தை வராது. அவ்வளவு ஊமை. ஆனால் பேசுறது நல்லா கேட்கும். நம்மைவிட அதிகமாகவே கேட்கும்."

"எப்படிப் பிழைப்பு நடக்குதுன்னு சொல்லலியே?

"சொல்றேன். மவராசா, சென்ட்ரல் ஸ்டேஷன்ல ஜி.டி. ரயிலுல ஏறுவான். நாக்பூர் வரைக்கும் ஒன்றரை நாள் வரைக்கும் இருப்பான். என்னை மாதிரி. மெக்கானிக்குங்க கூட இருந்துக்குவான். சமையல் பெட்டில போய் இஷ்டப்பட்டதை எடுத்துக்குவான்."

"நாக்பூர் வந்ததும்." "டில்லியில இருந்து புறப்படுற ஜி.டி. ரயிலும், சென்னையில் இருந்து புறப்படுற ஜி.டி. ரயிலும் இந்த நாக்பூர்லதானே சந்திக்குதுங்க? அய்யா டில்லிக்குப் போகிற ரயிலுல இருந்து இறங்கி, சென்னைக்குப் போற ரயிலுல ஏறிக்குவார். ரெண்டு ரயிலுமே இந்தப் பயலுக்குச் சொந்த ரயிலுங்க. டிக்கட் பரிசோதகர் களுக்கும் இவனை நல்லாத் தெரியும்; எல்லாத் தொழிலாளர் களுக்கும் இவன்மேல தனிப்பாசம்... நாக்பூரில் இவனை மடக்குனானே அந்தோணி. அவனும் இவனுக்கு ஒரு அப்பா. அவனோடதான், பயல் சென்னையில் இருந்து புறப்பட்டான். அந்தோணி அவனை டில்லி வரைக்கும் கூட்டிட்டுப் போக விரும்பியிருக்கான். பயல், டிமிக்கிக் கொடுத்துட்டான். இந்த ராசாவுக்கு டில்லி ஒத்துக்காதாம். அதனாலதான் அந்த அந்தோணியோட போகல. ஆனாலும் பயல் கடைசி நேரத்துல அந்தோணி காட்டுன அன்புக்கு ஈடாய் பசுவைப் பார்த்துக் கன்றுக்குட்டி கத்துவது மாதிரி. "அப். அப்"ன்னு கத்துவது. மாதிரி பாவம். அப்பான்னுகூட உச்சரிக்க முடியல. ஆனால் சொந்த மகனைவிட ஆயிரம் மடங்கு பாசம் வச்சிருக்கிறவன்!"

சீனிவாசன், இனிப்பில்லாமல் கேட்டான். "அப்பாக்கள் கிடக்கட்டும். இவன் அம்மா என்ன ஆனாள்? டேய் பயலே ஒங்கம்மா என்னடா ஆனா? அவ ஞாபகம் வருதா?”

சீனிவாசன் அந்தப் பயலை நேரடியாகக் கேட்டது, பலராமன் குழுவிற்குப் பிடிக்காதுபோலவே, அந்த இளம் பெண்களுக்கும் பிடிக்கவில்லை. எல்லோருமே முகம் சுழித்தார்கள்.

அந்தப் பயல் மருண்டு பார்த்தான் சுருண்டு உட்கார்ந்தான். தலையை மேலும் கீழும் ஆட்டினான். அவன் மனம் பின்னோக்கிப் போனது. நினைவுகள் மங்கல் மங்கலாய், மங்கலமற்ற நிகழ்ச்சிகளை நிழல் முகங்களாகக் காட்டின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நிழல்_முகங்கள்.pdf/36&oldid=588232" இலிருந்து மீள்விக்கப்பட்டது