நிழல் முகங்கள் 88
இந்த இடங்களில் வெளிச்சம் இல்லை. பலார்ஷா நகரம், நகர்ந்து போய்விட்டது மாதிரியான இருட்டு.
ரயில் நின்றதும், நவாப்ஜானும், பலராமனும் எழுந்தார்கள் மெக்கானிக் நாராயணனைப் பார்த்து "வாறியா. வாத்தியாரே. லேசா பூடலாம்." என்றார்கள். உடனே அந்த மெக்கானிக், ஸ்பேனர்களோடு எழுந்தான். ரயிலில் நட்டுக்களைச் சரிபர்ர்க்க வேண்டும். "போடுறதுக்கு" ஏது நேரம்? அவர்களைப் பார்த்து, "நட்டு கழலாமல் வாங்கோடா' என்றார் சங்கேத மொழியில்,
பலராமனும், நவாப்ஜானும் தடக்கப் போனார்கள். உடனே காஞ்சனா, கல்யாணியிடம் ஏதோ பேசினாள். பிறகு, பலராமனுக்கு முன்னால் போய் நின்று பேசினாள்.
"தமிழ்ச்செல்வி கதையைக் கேட்ட வேகத்துல சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுக்கல. எங்களுக்கும் ஏதாவது வாங்கிட்டு வாங்கோ"
"என்னெல்லாம் வேணும்.? இந்த ஊர்ல பிரியாணி பிரசித்தி"
“எனக்குப் பிரியாணி. இவளுக்கு தயிர்சாதம். முடியுமானால். ஒரு ஸ்பெஷல் மசாலா தோசை. கொஞ்சம் ஆப்பிள். இல்லாட்டி ஆரஞ்ச்"
"சரி வாங்கிட்டு வாறோம். வேற எதும் வேணுமா?"
"இதுவே அதிகம். என்னங்க பணம் வாங்காமல் போlங்க?"
'ஒங்க பணம்தான் எங்ககிட்டே இருக்குதே. ஒங்களை நாக்ப்பூரில் ரயிலேற்றிவிட வந்தாரே அவர் கொடுத்த பணம்."
"அய்யோ அது பெர்த்துக்காக கொடுத்த பணமாக்கும். நீங்க உங்களோட படுக்கை இடத்தை, எங்களுக்கு கொடுத்ததுக்காக தந்த ரூபாயாக்கும்."
"ஆமாம்மா. லஞ்சமாத்தான் வாங்குறோம். எல்லார்கிட்டேயும் வாங்குவது மாதிரி. எங்க வசதிகளை உங்களுக்குத் திருட்டுத் தனமாய் விற்றது நெசந்தான். ஆனால், இப்போ நாம் அண்ணன் தங்கையாய் பழகிட்டோம். ஒங்ககிட்டே லஞ்சம் வாங்குறது எங்க சிஸ்டருங்ககிட்டே லஞ்சம் வாங்குறது மாதிரி..."
“நல்லா இருக்குதே நியாயம். அது வேறு. இது வேறு. இந்தாங்க ரூபாய். பணம் வாங்காமல் எதுவும் வாங்கப்படாது.”
"சரி. வாங்கிக்கிறேன். அப்படின்னால் நீங்க ரெண்டு பேரும் எங்களை ஒங்களோட பிரதரா ஏத்துக்கலன்னு அர்த்தம். அப்படின்னா கொடுங்கோ."