பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


உணவும் உழைப்பும்

சீக்கிரம் தளர்ந்து போகும் உடலுக்கு சத்துள்ள உணவு இல்லாதது மட்டும் காரணமல்ல. உழைப்பில்லாததும்தான். அதாவது உடலுறுப்புக்களை சரிவர செயலாற்றலுக்குப் பயன்படுத்தாது சோம்பிக் கிடப்பதுதான்.

உழையாத உள்ளுறுப்புக்கள் ஒரு பக்கம் தேய, வெளிப்புறத் தாக்குதல்களாக பல்வேறு விதமான நோய்கள், காயங்கள், உடலுக்கு ஏற்படும். எரிச்சல் போன்ற சூழ்நிலைகள் மறு பக்கத்துத் தாக்குதல்களாகப் பாய, உடல் தளர்ச்சியுறுகிறது. மலர்ச்சி கெடுகிறது.

அப்படிப்பட்டவர்களுக்கு வயதுத் தோற்றம் அதிகமாகத் தெரிவது போலவே, அகால மரணமும் எதிர்பார்க்காத நேரத்தில் ஏற்பட்டு விடுகிறது. முன்னாட்களில் இயற்கையோடு போராடிப் போராடி, மனிதர்கள் சுகமான வாழ்வை வாழக் கற்றுக் கொண்டார்கள்.

அழகான இல்லங்கள், பணியாற்றத் தொழிலகங்கள், பணியாற்ற வரைமுறைகள், உழைப்புக்குப் பிறகு வேண்டப்படும் ஓய்வு முறைகள், உறக்க நெறிகள், உடலைக் காக்கும் உணவு முறைகள் எல்லாவற்றிலும் நிறைவான நுணுக்கங்களைப் பெற்று நேர்த்தியான வாழ்க்கை வழிகளில் வாழ மக்கள் வகுத்துக் கொண்டார்கள்.

பயங்கரக் கொள்ளை நோய்களான காலரா, பிளேக், அம்மை, நச்சுக்காய்ச்சல், எலும்புருக்கி நோய் போன்ற நோய்களைப் புறமுதுகிட்டு ஓட வெற்றிகொண்டார்கள். அதன் பயனாக, மனிதர்கள் இளமைக் காலத்தில் இறப்பது தடுக்கப்பட்டது. அதிக நாள் உயிர் வாழும் வாய்ப்பு நீட்டிக்கப்பட்டது.