98
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
இதம் நிறைந்த இனிய வாழ்வுக்கு இதயம்தான் மிக மிக முக்கியமானதாகும். இதயம் வலிமையாக இருந்தால் எதிர்ப்படும் எல்லாமே இனிமையாக இருக்கும். இளமையாகக்கூட இருக்கும். இதயம் மெலிவு பெற்றால், நலிவுற்றால், எத்தனை துயரங்கள் துளைத்தெடுத்துவிடும் தெரியுமா?
உழைப்போ உழைப்பென்று பணமோ பணமென்று இரவையும் பகலாக்கிக் கொண்டு எதிர்பார்த்து அலைபவர்களே உலகில் அதிகம். ஏன்? அவசியத்தைவிட ஆசைகள் அதிகம்; அநேகம், அதனால்தான்.
ஆசைகள் பேயாய் விரட்டுகின்றன. அடிமைப்பட்டவன் நாயாய் ஓடுகிறான். நரியாய் ஊளையிடுகிறான்.
எப்படியோ பணத்தை சேர்த்துவிட்டு இனிமேல் உல்லாசமாக இருக்கலாம். வாய்க்கு ருசியாக உண்ணலாம். வாழ்க்கை சுகம் எல்லாம் அனுபவிக்கலாம் என்று வரும் பொழுது, தள்ளாமை உடலில் வந்து விளையாட, நோய்கள் உடலுக்குள்ளே இசைபாட, ‘பத்தியம். வைத்தியம்’ என்று மருத்துவர் தடை போட, எல்லாமே இழந்து, தளர்ந்து போயிருக்கின்றவர்களையும் நாம் பார்க்கிறோம்.
நம் உடலுக்கு உழைப்பு எவ்வளவு முக்கியமோ. அவ்வளவு முக்கியம் ஓய்வும் உறக்கமும். ஓய்வு என்றால் உடல் உறுப்புகளுக்கு மட்டுமல்ல. ஒப்பற்ற கருவூலமாக, உழைப்புக் களஞ்சியமாக விளங்கும் இதயத்துக்குத்தான்.