பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

9



கொஞ்சம் தவறி கீழே விழுந்திருந்தால், கூர்முனையில், மாட்டிக் கொள்ளலாம். தவறிப் போனால் புலிக்கு இரையாகலாம். பயத்தால் மேலே பார்க்கிறான். அவன் பிடித்திருப்பது மரத்தின் விழுது அல்ல. மலைப்பாம்பின் வால், ஐயோ! அவன் உடல் பயத்தால் சிலிர்த்துத் துள்ளுகிறது. அந்த சலசலப்பில் ஒரு குச்சி ஒன்று ஒடிந்து, உயரத்தில் தொங்கிய தேன் கூட்டைக் குத்திவிடவே, தேன் சொட்ட ஆரம்பித்திருக்கிறது.

என்ன விழுகிறது என்று அண்ணாந்து பார்க்கிறபொழுது அவனது வாயில் ஒரு சொட்டுத் தேன் விழுகிறது. அதன் இனிமையில் லயித்துப்போய், இன்னொரு சொட்டு விழாதா என்று ஏங்கி மேலே பார்க்கிறான் அவன்.

அந்த ‘அவன்’ தான் நாம். நமது வாழ்க்கையில் கிடைக்கும் இன்பம் இப்படித்தான் இருக்கிறது. போகின்ற பாதையோ புதிர். நடக்கின்ற வழியோ நமட்டுச் சிரிப்பைப் போல. அதற்குள் எத்தனையோ பிரச்சினைகள். வேலைகள், மோதல்கள். மிரட்டல்கள். அத்தனைக்கும் ஈடு கொடுத்துத்தான் நாம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம், தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கை பிறந்தது நமக்காக. நாம் பிறந்ததோ வாழ்வதற்காக! வாழ வந்த நாம் வீழவோ, வீணாகவோ கூடாது. நாம் மேற்கொள்கின்ற வாழ்க்கைமுறை நெல்லுக்கிறைக்கின்ற நீராக இருக்கவேண்டுமே தவிர புல்லுக்கு போகின்றதாக ஆகிவிடக் கூடாது.