பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

15


3. தவிப்பும் இழப்பும்

அனல் பறக்கும் வெயில் காயும் வேளை. பாலை நிலம் போன்ற வெட்டவெளிப் பகுதியில் ஒருவன் நடந்து போய்க் கொண்டிருக்கிறான். களைப்பும், இளைப்பும் அவனைக் கொடுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது. எங்கேயாவது நிழல் இருந்தால் கொஞ்சம் உட்கார்ந்து செல்லலாம் என்ற ஆசைத் தவிப்பு அவனை ஆட்டிப்படைக்கிறது.

எதிரே ஒரு மரம் தெரிகிறது. அவன் தேகத்தில் கொஞ்சம் தெம்பு மீறிப் பாய்கிறது. தள்ளாடி நடந்து வந்து மரத்தின் நிழலில் அமர்கிறான். குளிர்ந்த தென்றல் வீசுகிறது. அவன் தேகத்தைப் பரவசப்படுத்துகிறது. அவன் தவிப்புக்குத் தகுந்த பரிசு அதுதானே! அதற்காக அவன் திருப்தியடைந்தானா! இல்லையே! அவனது ஆசை மனம் கொஞ்சம் தாலாட்டத் தொடங்குகிறது.

‘சாப்பிடுவதற்கு அறுசுவை உணவு கிடைத்தால், அதுவும் தளிர் வாழை இலையில் வைத்து விருந்தாகக் கிடைத்தால் எப்படி இருக்கும்? ஆனந்தமாக உண்டு மகிழ்வேனே’ என்று உள்ளுரத் தவிப்பு மேலிடுகிறது. யாரிடம் சொல்ல முடியும்? நினைக்கிறான். அவ்வளவுதான்.

அடுத்த நிமிடமே அவன் எதிரே அறுசுவை உணவு, இலையில் வைத்துப் பரிமாறப்பட்டிருக்கிறது. ஆவலுடன் பார்த்தான். அவசர அவசரமாக உண்டான். தென்றல் வந்து களைப்பைப் போக்கியது. உணவு வந்து பசியைப் போக்கியது. மகிழ்ந்தானா அவன்? மகிழ விட்டதா அவனது தவித்த நெஞ்சம்?