பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

51


9. இருப்பதும் சிரிப்பதும்

நண்பர்கள் இருவர், ஒருவன் சிதம்பரம். மற்றொருவன் திகம்பரம். நண்பர்கள் என்றாலும், நடைமுறை வாழ்க்கையில் இருவரும் இருதுருவங்கள். மாறுபட்ட கோணங்கள்.

தன்னைப் பற்றியே சதா காலமும் பெருமையாக நினைத்துக் கொண்டிருப்பவன். அதாவது தலைக்கனத்துடன் பிறரிடம் பேசுவதில் நிகரற்றவன் சிதம்பரம். எந்த விஷயமாக இருந்தாலும். அதில் தன்னை இணைத்துக் கொண்டு, ‘நானாக இருந்தால் இப்படித்தான் செய்வேன், செய்திருப்பேன்’ என்று சொந்தக் கற்பனையுடன் சொகுசாக பெருமையடித்துக் கொள்வதில் வல்லவன்.

பிறருக்கு அது பிடிக்குமோ பிடிக்காதோ என்பதைப் பற்றியெல்லாம் அவன் கவலைப்படுவதில்லை. அதீத கற்பனையில் எப்பொழுதும் ஆழ்ந்து போய் விடுவதுண்டு, ஆராய்ச்சி செய்கிறேன் என்று எந்தப் பொருளிலும் குற்றம் குறைகளைப் கண்டுபிடித்து, குதர்க்கவாதம் பண்ணுவதில்தான் அவனுக்கு சந்தோஷம். காலநேரம் பற்றி அவன் கவலைப்படுவதில்லை.

ஆனால் திகம்பரம் அப்படி அல்ல! ‘எதையும் முதலில் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், எப்படி இருக்கிறதோ சூழ்நிலை’ அதற்கேற்ப நடந்து கொள்ளவேண்டும். என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பவன்! இன்றைக்கு வாழ்வோம். நாளைக்கு வழி பிறக்காமலா போகும்! என்ற நெறிமுறையுடன் நடந்து செல்பவன்.