பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 நீங்காத நினைவுகள் நிலையை ஏற்படுத்தினார். மாணாக்கர்கள் முகத்தில் பாட்டின் சுவையை அவர்கள் அநுபவித்தது தெளிவாகப் புலனாயிற்று. அவர்களின் கண்களில் காணும் ஒளி உதட்டில் காணும் புன்முறுவல், உடம்பு முழுவதும் காணப்படும் கிளர்ச்சி இவற்றால் இவை தெளிவாகப் புலனாயின. பிறகு பாடலை அரை அரை அடியாகப் பாடி மாணாக்கர்களைக் குழுவாகத் தம்மைத் தொடர்ந்து பாடுமாறு செய்தார். பின்னர் பரவலாக ஒரு சிலமாணாக்கர்களைத் தனித்தனியாகவும் பாடச் செய்தார். இதனால் பாடவளர்ச்சியில் மாணாக்கர்களின் பங்கு எவ்வளவு என்பதை அறுதியிட்டுக் காட்டினார். - தொடர்ந்து குறத்தியின் இயற்கையோடொட்டிய வாழ்வு ஓவியம்போல் பாடலில் தீட்டப்பெற்றிருப்பதை மாணாக்கர்கள் உணர்ந்து அநுபவிக்குமாறு விளக்கமும் தந்தார். விருந்தோம்பிய பிறகுதான் குறத்தி உறங்கச் செல்கின்றாள் என்பதை மாணவர் உள்ளத்தில் நன்கு பதியச் செய்தார். தமிழகத்தில்தான் தலையாய விருந்தோம்பல் பண்பாகிய குறமகளிடம் காணப்பெறும் சிறப்பைப் பாராட்டிப் பேசினார். படிப்பறிவு இல்லாத குறத்தியாயினும் அவள் உண்டு உயிர்த்து உறங்குவது, இனம் பெருக்குவது வாழ்வென்று அமையாது கயற்கண்ணியம்மையைத் தொழுது வாழும் இறையன்பினை மேற்கொண்டமையையும் பாராட்டிப் பேசினார். பாட முடிவாக, மீண்டும் பாடலை இசையுடன் பாடி அடியிற்கண் வினாக்களை விடுத்துப் பாடத்தைத் தலைக்கட்டினார். 1. குறமகளின் தொழில்கள் யாவை? 2. அவர்கள் பருகும் பானங்களைக் கூறுக. 3. அவர்கள் எவற்றை உடுப்பர்? 4. அவர்கள் எவ்வாறு விருந்தோம்புவர்? 5. அவர்கள் எதன்மீது உறங்குவர்? 6. அவர்களுடைய இறைபழிபாடு எவ்வாறு கூறப் பெற்றுள்ளது? சாதாரணமாகத் தமிழாசிரியர்களில் பெரும்பாலோர் கரும்பலகையைப் பயன்படுத்துவதில்லை. இலக்கணப் பாடத்தில் கூட வாய்ப்பந்தல் போட்டே காலத்தைப் போக்கி விடுவர். மீனாட்சி