பக்கம்:நீங்காத நினைவுகள்-2.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 நீங்காத நினைவுகள் நினைவு 3 அரையாண்டுத் தேர்வு எழுத்து முறை நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் தேர்வு மண்டபத்தின் மேற்பார்வையாளராக இருக்கும் வாய்ப்பு பெற்றிருந்தேன். சுற்றி வருங்கால் பலருடைய எழுத்துகளைப் பார்த்தேன். மீனாட்சி சுந்தரம் அருகிலும் நின்று கொண்டு சில நிமிட நேரம் அவர் எழுதும் விடையை நோக்கினேன். எழுத்து மணிமணியாக முத்து கோத்தாற்போல இருந்தது. நடையோ ஆங்கிலப் பேராசிரியர்களின் நடையையும் தோற்கடிக்கும் முறையில் இருந்தது. தேர்வு மண்டபத்தில் விரைவாக எழுதும்போதே மூன்று மணிநேர இறுதிவரையும் எழுதிய விடைகள் மிக அற்புதமாக அமைந்திருந்தன. முதல்வர் முதலியாரையும் திருவேங்கடாச் சாரியாரையும் இவருடைய ஐந்து விடையேடுகளையும் ஒருமுறை நோக்கிய பிறகு மதிப்பீடு செய்பவர்க்கு அனுப்பலாம் என்றேன். அவர்கள் அவற்றை மேலோட்டமாகவே நோக்கி வியந்து போயினர். இவருக்கு எழுத்துத் தேர்விலும் முதல் வகுப்பு கிடைப்பது உறுதி என்பதாக அறுதியிட்டனர். நினைவு 4 : இறையருளால் அந்த ஆண்டு இவருக்கு எழுத்துத் தேர்விலும் செய்முறைத் தேர்விலும் முதல் வகுப்புகள் கிடைத்தன. காரைக்குடியில் நான் பணியாற்றிய பத்தாண்டுக் காலத்தில் 1950-60) இவர் ஒருவரே முதல் வகுப்பில் தேறியவராகக் காணப்பட்டார். எழுத்துத் தேர்வில் அக்காலத்தில் முதல் வகுப்பில் தேறினவர் இவர் ஒருவரே என்பது என் நினைவு. இவர் அருப்புக்கோட்டையில் தேவாங்கர் உயர்நிலைப்பள்ளியில் போய்ச் சேர்ந்தார். ஒருமுறை விரிவுப் பணித்துறை ஆதரவில் நான், திருவேங்கடாச்சாரி, முதல்வர் அருப்புக்கோட்டை உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றிருந்தபோது இவரைச் சந்தித்து மகிழ்ந்தோம். பயிற்சி பெற்றிருந்தபோது கண்ட தோற்றத்தைவிட இப்போது கம்பீரமாகக் காணப்பெற்றார். மாணாக்கர்களிடமும் ஆசிரியர்களிடமும் பெரும்புகழ் பெற்றிருக்கவேண்டும் என்று ஊகித்துக்கொண்டேன்.