பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

வேங்கை வரிப் புலி நோய் தீர்த்த விடகாரி
ஆங்கு அதனுக்கு ஆகாரம் ஆனாற்போல், பாங்கு அறியாப்
புல்லறிவாளர்க்குச் செய்த உபகாரம்
கல்லின்மேல் இட்ட கலம்.15

'அடக்கம் உடையார் அறிவு இலர்' என்று எண்ணிக்
கடக்கக் கருதவும் வேண்டா;—மடைத் தலையில்
ஓடு மீன் ஓட உறு மீன் வரும் அளவும்,
வாடி இருக்குமாம், கொக்கு.16

அற்ற குளத்தின் அறு நீர்ப் பறவைபோல்
உற்றுழித் தீர்வார் உறவு அல்லர்; அக் குளத்தில்
கொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே
ஒட்டி உறுவார். உறவு.17

சீரியர் கெட்டாலும் சீரியரே; சீரியர் மற்று
அல்லாதார் கெட்டால் அங்கு என் ஆகும்?—சீரிய
பொன்னின் குடம் உடைந்தால், பொன் ஆகும்; என் ஆகும்,
மண்ணின் குடம் உடைந்தக்கால்?18

ஆழ அமுக்கி முகக்கினும், ஆழ் கடல் நீர்
நாழி முகவாது. நால் நாழி;—தோழி!—
நிதியும் கணவனும் நேர்படினும், தம்தம்
விதியின் பயனே பயன்.19

உடன்பிறந்தார் சுற்றத்தார் என்று இருக்க வேண்டா;
உடன் பிறந்தே சொல்லும் வியாதி; உடன் பிறவா
மா மலையில் உள்ள மருந்தே பிணி தீர்க்கும்;
அம் மருந்து போல்வாரும் உண்டு.20

இல்லாள் அகத்து இருக்க, இல்லாதது ஒன்று இல்லை;
இல்லாளும் இல்லாளே ஆம் ஆயின், இல்லாள்
வலி கிடந்த மாற்றம் உரைக்குமேல், அவ் இல்
புலி கிடந்த தூறு ஆய்விடும்.21

எழுதியவாறே காண்—இரங்கும் மட நெஞ்சே!—
கருதியவாறு ஆமோ,கருமம்? கருதிப் போய்க்
கற்பகத்தைச் சேர்ந்தோர்க்குக் காஞ்சிரங்காய் ஈந்ததேல்.
முற்பவத்தில் செய்த வினை.22